இலங்கை பொளுளாதாரச் சிக்கல்கள் தொடர்பில் வெளிவந்த பதிவு. ஆனால் இது அணைத்துலக பொளுளாதாரச் சிக்கல்களுக்கும் பொருந்தும்.
நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம் கண்டு திருந்திக் கொண்டால் நாடும் தானாக திருந்தும் என நான் நம்புகின்றேன்.
'கோடா கோ ஹோம்' என கோசம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் கோட்டா தான் என்று.
![]() |
இலங்கை பொருளாதாரச்
சிக்கல்கள் |
என்றாலும் அவர்களோடு சேர்த்து இதற்கு வகை கூறவேண்டிய இன்னும் சில தரத்தவரும் இருக்கின்றனர்.
அவர்கள் யார்?
இவ்வளவு காலமும் தனது வயிற்றுப் பசியை மாத்திரம் கருத்திற்கொண்டு தேர்தல் காலங்களில் வழங்கும் சாராய போத்தலுக்கும் உணவுப் பொதிக்கும் ஏமார்ந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய வாக்காளர்கள்.
பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொறுப்பு உணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் அரச ஊழியர்கள்.
விலை உயர்ந்த பிராடோ, லம்போகினி, டிபண்டர்களுக்கு ஒரு சட்டமும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டத்தையும் அமல்படுத்தும் போலீசார்.
அரச வாகனத்தை, அதன் சாரதியை தனது மனைவிக்கு கடை செல்ல பயன்படுத்தும் ஆயுதப் படை அதிகாரிகளும், பிற அரச அதிகாரிகளும்.
பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசி களை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டுக்கட்டாக தனது வீட்டுக்கு கடத்தும் பரீட்சை மண்டப பொறுப்பாளர்கள்.
தொழில் பதவிகளைப் பெற தனது திறமையை, பட்டத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் முன் முழந்தாளிடும இளைஞர்கள்.
சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி விமானத்தில் முதல் வகுப்பில் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும், மத்திய கிழக்கில் வேர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிக்கும் உழைப்பாளிளோடு எரிந்து விழும் விமானப் பணியாளர்கள்.
தமக்கு போதிய வருமானம் இருந்தும், களவாக சமூர்த்தி எடுக்கவும், கிராமசேவகர்களைப் பயன்படுத்தி கள்ள சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு புலமைப்பரிசு, மஹாபொல எடுக்கும் முனையும் பெற்றோர்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியை பயன்படுத்தினால் மின்சார பிரச்சனை பெருமளவு தீரும் என அறிந்திருந்தும், தமது வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் அத்திட்டத்தை மண்ணாக்கும் மின்சார சபை பொறியியளாளர்கள்.
மிளகாய் தூளில் செங்கல்லையும், மஞ்சள் தூளில் மாவையும், மிளகு விதையோடு பாப்பாசி விதையையும் கலந்தும், பழங்களுக்கு இரசாயணம் அடித்து, பலாக்காயை இரசாயண ஹாப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயிகளிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி, மரக்கறி, பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற் கொள்ளை அடிக்கும், கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள்.
சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது புறத்தில் அரச இலட்சினை பொருத்திய நிலையிலும், தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி களவில் அனுப்புகின்ற வன ஜீவி பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்.
குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல், மருந்து நிறுவனங்களின் தரகுப் பணத்திற்காக அதிக விலையுள்ள மருந்தை சிபாரிசு செய்யும், தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் வைத்தியர்கள்.
குப்பை கூளங்களை ஏற்றிச் செல்ல வரும் போது கையில் கொஞ்சம் பணத்தை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் போட்டு விட்டுச் செல்லும் நகரசபை ஊழியர்கள்.
வீடுகளில் முடங்கிக் கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டு இருக்காமல், குறைந்தது ஒரு கொச்சிக்காய் கன்றையாவது நடத் திராணியற்ற முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்.
இவர்கள் மட்டுமா?
அறையில் இருந்து வெளியேறும் போது மின் சுவிட்சை அணைக்காத,
ஒழுங்காக தண்ணீர் குழாயை மூடாத,
கையிலிருக்கும் உணவுக் கழிவை நிலத்தில் கண்டபடி போடுகின்ற,
உட்காரும் கதிரைக்குக் கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற,
கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புகின்ற,
தனது குழந்தையின் கழிவுகளை நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற,
மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வீதி சட்டங்களை மீறுகின்ற,
பேரூந்து, தொடரூந்து சன நெரிசலில் பெண்களை தொல்லைப்படுத்துகின்ற,
அடுத்த பிள்ளையின் இடத்தை பறித்து தனது பிள்ளையை வரிசையில் முன் நிறுத்துகின்ற,
மின்சாரமானியில் கள்ளத்தனம் செய்து பாவித்ததைவிட குறைந்த கட்டணத்தை களவில் செலுத்துகின்ற,
வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்குத் திருப்பி விடுகின்ற,
பொலித்தீன் பிளாஸ்டிக் என்பவற்றை தீ வைத்து எரித்து சூழலை மாசு ஆக்குகின்ற,
இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து கோ ஹோம்!
நீங்கள் சின்ன திருடர்கள் அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்க வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பிருந்தால் அவர்களை மிஞ்சிவிடமாட்டீர்களா?
மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.