பதட்டமும் மன உளைச்சலும்

மாவீரன் நெப்போலியன் உலகத்தையே வெல்ல நினைத்து போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றாலும், கடைசியில் பிரித்தானியாவிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரித்தானியா சிறைப்பிடித்து செயிண்ட் ஹெலெனா தீவில் தனிச்சிறையில், தனிமையில் வைத்தது.

பதட்டமும் மன உளைச்சலும்

நெப்போலியனின் கடைசிக் காலம் சிறையில் மன உளைச்சலில் கழிந்தது. அவரை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.

ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த நெப்போலியனுக்கு சிந்தனை செயல்படாமல், சதுரங்க அட்டை மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட அதை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அது அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து, அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் வல்லமை கொண்டது எலி. ஆனால், மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு, அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னும் பின்னும் பதட்டத்துடன் திரிந்து, சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயற்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.

சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமா? பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருங்கள். நிச்சயம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடைகான தெளிவான, பதட்டம் அற்ற மனத்தினால் முடியும். சாமானியனும் மாவீரன் ஆகலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.