யானையும் குச்சியும்

யானையை எதில் கட்டிப் போடலாம்? யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டலாம். இது உண்மையா என நீங்கள் கேட்கலாம். ஆம் என யானையும் குச்சியும் (The Elephant And The Twig) என்ற நூல் கூறுகின்றது. ஜெஃப் தாம்ஸன் எழுதிய இந்த நூல் சுய விழிப்புணர்வுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் உகந்ததால், இது “நேர் சிந்தனைக் கலை” என்று அழைக்கப்படுகின்றது.

யானையும் குச்சியும்

பெரிய மரங்களையே சாய்த்துவிடும் யானைக்கு குச்சி ஒன்றுமில்லைதான். ஆனால், குச்சியை ஒன்றுமில்லை என நினைக்காதவாறு அதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டது.

யானை குட்டியாய் இருக்கம்போது, ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டுவார்கள். குட்டி யானை அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகள் செய்து தோற்றுவிடும். சில நாட்கள் போராடிப் பார்த்த குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இதிலிருந்து விடுபடமுடியாது என்ற முடிவுக்கு வந்து, பிணைப்பிலிருந்து விடுதலை பெறும் முயற்சியை நிறுத்திவிடும். வளர்ந்தும், தன்னைப் பிணைத்திருப்பது சாதாரண விடயம் என்று நினைப்பதில்லை.


நாமும் இந்த யானையைப் போல்தான். நமது திறமைகள் எவை, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விளங்கிக்கொள்ளாமல், சாதாரண மனத்தடைக்குப் பயந்து ஒதுங்கி நிற்கிறோம். அந்த பிணைப்பிலிருந்து வெளியே வரத் தயங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் யானைப் பலம் கொண்டவர்கள். நம்மை சிறு குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத்திறமையும் உலகிற்குத் தெரியும்.

யானையும் குச்சியும் என்ற நூலில் ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்கிறார். அவை சுருக்கமாக பின்வருமாறு:
  1. எதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம்  இப்போதே!
  2. நம்முடைய உலகில் நாமே கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.
  3. நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கப் போகிறீர்கள்?
  4. உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை. அந்த சக்தியை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.
  5. வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள். நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.
  6. சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
  7. உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள். உங்கள் செயல்வேகம் அதிகரிக்கும்.
  8. இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்.
  9. உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள். அநாவசியமான நேரக் கொல்லிகளை விரட்டியடியுங்கள்.
  10. நதியைப்போல்  ஓடிக்கொண்டிருக்க வேண்டுமானால், நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
  11. தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.
  12. நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்கு வழிகள் வேண்டாம்.
  13. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது.
  14. அடுத்தவர் உங்கள் மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதன் யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, மாறாக வேகப்படுத்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.