கழுதைகளுடன் வாதிடப்போகாதீர்கள் (குட்டிக்கதை)

கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!" என்று கூறியது.

புலி கோபமடைந்து, "இல்லை, புல் பச்சை!" என்று கூறியது.

விவாதம் சூடுபிடித்தது. இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

donkey-tiger-lion

சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?" என்று கேட்டது.

சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது.  

கழுதை விரைந்து தொடர்ந்தது, "புலி என்னுடன் உடன்படவில்லை... முரண்படுகிறது அரசே! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்று கூறியது.

அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும் பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான் உனக்குரிய தண்டனை" என்று தீர்ப்பளித்தது.

கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, "புல் நீலநிறமானது!", "புல் நீலநிறமானது!" என்று கூறிக்கொண்டு அங்கிருந்து அகன்றது. 

புலி அதனது தண்டனையை ஏற்றுக்கொண்டது. ஆனால் அது சிங்கத்திடம் "அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? புல் பச்சை நிறம்தானே" என்றது.

சிங்கம், "நீ சொல்வது சரிதான். புல் பச்சைநிறம்தான்."  

புலி, "அப்படியானால் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?".

சிங்கம் பதிலளித்தது, "புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!"

முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது மாயையான நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே.  

பொருளற்ற விவாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாதவர்கள். அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண்மூடித்தனமாகத்தான் இருப்பார்கள்.  

அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். அறியாமை அலறும் போது, நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.