இந்தி கட்டாயம் கற்க வேண்டுமா?

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களுக்கான பதிவு இது.

anti-hindi


இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையைப் பாருங்கள். பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி ஆகியவற்றின் தற்போதைய நிலை என்ன?

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்யுங்கள். என்ன சாதித்துள்ளது? வடமேற்கு உத்திரப்பிரதேசத்தின் தாய்மொழி பிரஜ் பாஷா. தென்மேற்கு உத்திரப்பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்திரப்பிரதேசத்தின் தாய்மொழி போஜ்புரி. பிரதாப்கர் போன்ற மத்திய உத்திரப்பிரதேசத்தில் பேசப்படுவது ஆவ்தி. பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் இந்திதான். போதாதற்கு சமஸ்கிருதம் மேலதிக அலுவலக மொழி. ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.

ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால் தாய்மொழி ஹரியாணி.

ராஜஸ்தானில் ஆட்சிமொழி இந்தி. ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி என்பனவாகும்.

மத்தியப்பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி, ஆனால் தாய்மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி, பகேலி என்பனவாகும்.

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது. ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, பாடி. லடாக்கின் மொழி லடாக்கி, ஆனால் ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக இந்தி.

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி, சந்த்தலி, ஆனால் ஆட்சி மொழி இந்தி.

மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன. ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி, கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன. சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.

பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால், இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா?

நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான சர்வாதிகாரம்? அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய. கல்விக் கொள்கை வாயிலாக.

ஆங்கிலமும் உலகப் பொதுமொழி அல்ல என்பது உண்மைதான். உலகின் பொதுமொழி தொழிநுட்பந்தான். ஆனால் உலகத்தின் பொது அறிவு, மருத்துவம், விஞ்ஞானம், வரலாறு அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அதனால் ஆங்கிலம் கற்பது அவசியமாகிறது.

ஆனால், இந்தியில் அப்படி எந்த ஒரு அறிவுப் பொட்டகமோ, இலக்கியச் செழுமையோ, வரலாற்று பின்னணியோ இல்லை. இந்தி படிப்பது பானிப்பூரிக் காரர்களிடம் பேசிக்கொள்ளமட்டுமே பயன்படலாம்!

என் நண்பன் ஒருவனுக்கு சீனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அவன் சீனமொழி தெரிந்தவனுமல்ல, ஆனால் அவன் ஒரு மென்பொருள் பொறியியலாளன்.

அவனிடம் தொழிநுட்பம் இருந்ததால் சீனமும் அவனை ஆரத் தழுவி வரவேற்றது. வெறும் மொழியை மட்டும் தெரிந்திருந்தால் அவனால் தமிழக எல்லையைக்கூட தாண்டியிருக்க முடியாது. 

எனவே தொழில்தான் நமது சர்வதேச மொழி ஒரு மருத்துவர் எந்த நாட்டுக்குப் போனாலும் மருத்துவராக வேலை செய்யலாம். 

ஒரு பொறியாளர் எந்த நாட்டுக்குப் போனாலும் பொறியாளராக வேலை செய்யலாம்.

ஏன் ஒரு கொத்தனாரும் கூட எந்த நாட்டுக்கும் சென்று கொத்தனாராக வேலை செய்யமுடியும்.

ஆனால் ஒரு மொழியைப்படித்து அதில் பட்டம் பெற்றால் அந்த மொழி உள்ள தேசத்தில் மட்டுமே பணிபுரியமுடியும். அதுவும் இந்தியில் படித்து வட இந்தியாவுக்கு வாத்தியார் வேலைக்குச் சென்றால் அங்கே நம்மைவிட திறமையான பிறப்பிலிருந்தே இந்திபேசும் பண்டிட் காத்திருப்பான் நமக்குப் போட்டியாக.

இந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த பானிப்பூரிக்காரனுக்கு ஏன் கிடைக்கவில்லை?

விரும்பிக் கற்றால், இந்தியோ வேற்று மொழியோ கற்க மூன்றுமாத பேச்சு வகுப்புக்கள் போதுமானவை.

நமது பிள்ளைகளை இளமையிலேயே இந்தி படிக்கச் சொல்வது அவர்களுக்கு அது தேவையற்ற சுமைதான்.

தேவையில்லாமல் அதை ஒரு பாடமாக்கி, அதுக்கொரு தேர்வு வைத்து, அதுக்கொரு வீட்டுப்பாடம் வைத்து, பிள்ளைகளுக்கு தேவையற்ற சுமையைக் கொடுப்பதால், அப்படி பெரியதாக எந்தப் பயனும் இல்லை. கற்காததால் பெரிய நட்டமும் இல்லை.

நன்றி: முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.