விஜயனின் வருகையும் தபாற்தலையும்

முகநூலில் கீழேயுள்ள படம் பகிரப்பட்டிருந்தது. முகநூலில் காணும் யாவும் சரியென்றோ, பிழையென்றோ முடிவு செய்யவியலாது. உண்மையும் பொய்யும் கலந்து காணப்படுகின்றன. இந்தப்படத்துடன் “இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம்” என்ற தொனியிலும், “இலங்கை அரசாங்கம் வெளியிட்டு, பின்னர் மீளப்பெற்றுக் கொண்ட தபாற்தலை” என்ற தொனியிலும் கருத்து வெளியிடப்பட்டது.

விஜயனின் வருகையும் தபாற்தலையும்
விஜயனின் வருகையும் தபாற்தலையும்

தபால் தலையைப் பார்த்து என்னவென்று நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். கடற்கலத்திலிருந்து விஜயன் தரையிறங்குவது போன்றும், இலங்கை அரசி குவேனி தரையில் உட்கார்ந்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இத்தபால் தலையை இலங்கை அரசு மீளப்பெற்றதா என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் இது பௌத்த காலத்தின் 2500 ஆண்டுகள் நிறைவையொட்டியும் விஜயனின் இலங்கை வருகையின் நினைவையொட்டியும் 23 மே 1956 என்று வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிகின்றது. பௌத்தத்தின் 2500 ஆண்டுகள் (Sambuddha Jayanthi) நிறைவையொட்டி 1956 ஆம் ஆண்டு இலங்கை அரசு வெளியிட்ட நான்கு தபால் தலைகளில் இதுவும் ஒன்று. ஏனைய முன்றில் உலகைச் சூழ்ந்த தர்மச்சக்கரம், அமைதியின் கை, விளக்குடன் தர்மச்சக்கரம் என்பன காணப்பட இது மட்டும் விஜயனின் வருகையைக் குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தபால் தலை தொடர்பில் தமிழ், சிங்கள வலைப்பூக்களின் பதிவுகள் சிலவற்றைக் காண முடிந்தது. சிங்கள வலைப்பதிவாளர் ஒருவர் “இது ஆங்கிலேயர் வெளியிட்ட தபாற்தலை. ஏனென்றால், ‘சிலோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது அவர்கள் சிங்களவர்கள் குடியேறிகள் என்ற கருத்தை திணிக்க மேற்கொண்ட முயற்சி” என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உண்மையில் 1956 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிடப்பட்டபோது, இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டது. அப்போது இலங்கையை ஆட்சி செய்தவர்கள் சிங்களவர், ஆங்கிலேயர் அல்ல. மேலும், 1972 ஆம் ஆண்டு யாப்பு நடைமுறைப்படுத்தலின் பின்பே இலங்கையின் அதிகார பூர்வப் பெயரான “சிலோன்” என்பது “சிறிலங்கா” என மாற்றப்பட்டது.

தமிழ் வலைப்பதிவாளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில், “1956 முதல் 1966 வரையான காலப்பகுதியில் இத்தீவில் இனப் போர் இருக்கவில்லை. அங்கு சமாதானம் காணப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டுதான் இலங்கையின் முரண்பாடு போராக மாறியது. ஆயினும், அதற்கு முன் இரு இனங்களுக்குமிடையே “சமாதானம்” காணப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஜயன் எப்போது இலங்கையில் கால் பதித்தானோ அப்போது முரண்பாடும் பகையும் சண்டையும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுவிட்டன. குவேனியின் ஆட்சியைப் பறித்தது, எல்லாளனுடனான போர், யாழ்ப்பாண இராட்சியம் மீதான போர் என அதிக உதாரணங்கள் உள்ளன. ஆகவே, சில அமைதியான காலங்களை பிழையாகக் கருதக்கூடாது. அவை “அமைதியான எரிமலையின் காலம்” எனக் கொள்ளலாமே தவிர, வேறல்ல. நிற்க, 1956 முதல் 1966 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:

  • 1956 நடைமுறைப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் (சிங்களம் மட்டும் சட்டம்) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழர்களில் 150 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
  • 1956 இல் இடம்பெற்ற கல்லோயாக் கலவரத்தில் 150 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 1957 இல் இடம்பெற்ற சிறி எழுத்துத் திணிப்பும், அதற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்
  • 1958 இல் தமிழருக்கெதிரான கலவரத்தில் 300 முதல் 1500 பேர் கொல்லப்பட்டும். 1000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குறிப்பிட்ட வலைப்பதிவாளருக்கு இவ்விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக வரலாற்றுப் பிழைகளை பதிவு செய்யக்கூடாது. ஆனாலும், குறிப்பிட்ட பதிவில் இருந்த ஒருவிடயம் கவனிக்கத்தக்கது. அது பின்வருமாறு:

ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற (1983-84) நிகழ்ச்சியில் பௌத்த துறவி ஒருவர் சிங்கள கூட்டத்தைப் பார்த்து “இந்த (தமிழ்) பெண்களை தாக்குவதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா? இவர்களின் கருவறையில் இருந்து நாம் பிறந்தோம் என்பதையும் அவர்களின் மார்பகங்களிலிருந்து பால் குடித்தோம் என்பதையும் நீங்கள் நினைக்கவில்லையா?" (“Aren’t you ashamed to attack these (Tamil) women? Don’t you remember we originated from their wombs and drank the milk from their breasts?”)

மைசூர்ப் பருப்பு

பருப்பு என்பது தானியங்களை அல்லது தாவர விதைகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மைசூர்ப் பருப்பை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மலிவு விலை, சுவை ஆகிய காரணங்களினால், இது இலங்கை, இந்தியா உட்பட்ட தென்னாசிய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. டால் (Dal) என்ற உணவுத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பருப்பு வகைகயில் இது முக்கிய இடம் பெறுகிறது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பொதுவாக டால் என்பது மைசூர்ப் பருப்பினால் உருவாக்கப்பட்டும் உணவைக் குறிக்கும். பல இடங்களில் இது பொதுவாக “பருப்புக் கறி” என அழைக்கப்படுகிறது.

மைசூர்ப் பருப்பு
மைசூர்ப் பருப்பு
மைசூர்ப் பருப்பு ஆங்கிலத்தில் “லென்டில்” (lentil) எனப்படும் தாவரத்தில் இருந்து பெறப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் “லென்ஸ் குலினரிஸ்” (Lens culinaris) என்பதாகும். இதில் பல வகைகள் காணப்பட்டாலும் சிவப்பு நிற மைசூர்ப் பருப்பு அதிகம் விரும்பப்படுகிறது. கனடா, இந்தியா, அவுஸ்ரேலியா, துருக்கி, நேபாளம் ஆகிய நாடுகளில் மைசூர்ப் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.

மைசூர்ப் பருப்பில் காணப்படும் ஊட்டச்சத்து விபரங்கள் பின்வருமாறு.



ஊட்டச்சத்து மைசூர்ப் பருப்பு
(100 கிராம்)
ஆற்றல் 1,477 kJ (353 kcal)
காபோவைதரேற்று 63 g
கொழுப்பு 1 g
புரதம் 25 g
தயமின் பி1 0.87 mg
ரிபோஃபிளாவின் பி2 0.211 mg
நியாசின் பி3 2.605 mg
உயிர்ச்சத்து பி5 2.14 mg
உயிர்ச்சத்து பி6 0.54 mg
இலைக்காடி பி9 479 μg
உயிர்ச்சத்து சி 4.5
கல்சியம் 56 mg
இரும்பு 6.5 mg
மக்னீசியம் 47 mg
பொஸ்பரஸ் 281 mg
பொட்டாசியம்677 mg
சோடியம் 6 mg
துத்தநாகம் 3.3 g
நீர் 8.3 g

மைசூர்ப் பருப்பிற்கும் சில முக்கிய உணவுப் பொருட்களுக்குமிடையிலான ஊட்டச்சத்து வேறு விபரங்கள் பின்வருமாறு. (100 கிராமுக்கு ஏற்ப தரப்பட்டுள்ளது)

உணவு நார்ப்பொருள் புரதம் கொழுப்பு
மைசூர்ப் பருப்பு 10.7 கி 25 கி 1 கி
கோதுமை 20.6 21.3 2.5
அரிசி 1.6 8 0.8
சோயா 44.2 174 95
பால் 0 61 61.8
கரட் 41.1 14.7 3.6
உருளைக் கிழங்கு 14.4 13 0.6

பேஸ்புக் அடிமைத்தன அளவுகோல்

இன்று இணையத்தை கைபேசியிலோ, கணனியிலோ பயன்படுத்தும் பலர் பேஸ்புக்கையும் (முகநூல்) பயன்படுத்தத் தவறுவதில்லை. ஆனால், பலர் மெது மெதுவாக இதற்கு அடிமையாகிவிடும் நிலை உள்ளது. நீங்கள் பேஸ்புக் பாவனையாளரா? அதன் மீதான உங்களது ஆர்வத்தை அளவிடும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் பேஸ்புக் அடிமைத்தன அளவுகோலொன்றினை உருவாக்கியுள்ளார்கள்.
பேஸ்புக் அளவுகோல்

நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் ‘பேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்’ (Bergen Facebook Addiction Scale) ஆகும். சுமார் 400 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சினையை அடுத்தே இதனை அவர்கள் தயாரித்துள்ளனர்.

பேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்


* நான் அடிக்கடி மிகவும் அதிகமான நேர்த்தை பேஸ்புக்கில் செலிவிடுகிறேன். (நான் நினைப்பதைவிட அதிக நேரம் அதில் செலிவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் இரவில் அதிக நேரம் போஸ்புக்கில் இருப்பதால், காலையில் அடிக்கடி சோர்வுக்குள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் பேஸ்புக்கில் மிகவும் அதிக நேரம் செலவு செய்வது பற்றி என் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆம் | இல்லை 

* நான் வேலை தொடர்பற்ற காரணங்களுக்காக பேஸ்புக்கில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகச் செலவு செய்கிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பாவணை அனுமதிக்கப்படாதபோதும் வேலை செய்யுமிடத்தில் அல்லது பாடசாலையில் நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

* ஒரு நாள் முழுவதும் என் பேஸ்புக்கைப் பாவிக்காதுவிட்டால், நான் அதனை மிகவும் கடினமானதாக உணர்கிறேன்.
ஆம் | இல்லை

* பேஸ்புக்கில் அதிக நண்பர்களை சேகரிக்க நான் முயன்றுள்ளேன்
ஆம் | இல்லை 

* என் பேஸ்புக் நண்பர்கள் பலர் உண்மையில் என்னுடைய உண்மையான நண்பர்கள் இல்லை.
ஆம் | இல்லை 

* அளவுக்கதிகமான பேஸ்புக் பாவனையால் என்னுடைய வேலை அல்லது பாடசாலை செயற்பாடு பாதிக்கப்பட்டது.
ஆம் | இல்லை 

* அளவுக்கதிகமான பேஸ்புக் பாவனையால் என்னுடைய உறவுகள் பாதிப்புக்குள்ளதகின.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் விளையாட்டுக்களை விளையாடுவதற்காக நான் அதிக நேரம் செலவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் நான் ஒன்றைப் பதிவிடும்போது, அதற்கான கருத்துக்கள் கிடைக்காவிட்டால் நான் ஏமாற்றத்திற்குள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் தனிப்பட்ட முறையில் ஒருவடன் பேசுவதைவிட பேஸ்புக்கில் பேசவே விரும்புகிறேன்
ஆம் | இல்லை 

* நான் பேஸ்புக் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க முயன்றும் பயனில்லை.
ஆம் | இல்லை 

* மற்ற செயற்பாடுகள் இணையத்தில் செய்வதைவிட பேஸ்புக்கிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* மற்றப் பொறுப்புக்களைத் தவிர்க்க பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து மற்ற செயற்பாடுகளுக்கான நேரத்தை குறைத்துவிட்டேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் பல நண்பர்கள் இருந்தாலும், நான் தனிமையை உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* மற்றவர்களுடன் வெளியே சென்றாலும் பேஸ்புக்கில் அடிக்கடி நுழைகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கை காலையில் பார்ப்பது, முதலில் செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்றாகும்.
ஆம் | இல்லை 

* இரவில் இறுதியாகச் செய்யும் வேலைகளில் ஒன்றாக பேஸ்புக்கை பார்ப்பதும் உள்ளது.
ஆம் | இல்லை 

* மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது பேஸ்புக்கை பயன்படுத்தினால் நலமான உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பாவனையால், நான் அடிக்கடி பாடசாலைக்கு, வேலைக்கு, கூட்டத்திற்கு அல்லது சந்திப்புக்கு தாமதமாகச் செல்கிறேன்.
ஆம் | இல்லை 

* என்னை நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் இணைக்காதுவிட்டால், நான் மிகவும் மனக்குழப்பத்திற்கு உள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* எனது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் / சொல்கிறார்கள் என்பதை தானியக்கமாக அறிவிக்கும்படி நான் எனர் பேஸ்புக்கை அமைத்துள்ளேன்.
ஆம் | இல்லை 

* என்னையும்விட ஒருவர் அதிகமான நண்பர்களை பேஸ்புக்கில் கொண்டிருந்தால், நான் கவலையாக உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* ஒரு மாதத்திற்கு பேஸ்புக்கை கைவிடுவதென்பது சாத்தியமில்லை உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* “உண்மை வாழ்க்கையில்” என ஒருவர் பேஸ்புக்கில் சொல்வது என்னை அடிக்கடி குழப்பத்துக்குள்ளாக்கிறது.
ஆம் | இல்லை 

* நான் ஒன்றுமே செய்வதற்கில்லை என சலிப்பாக உணர்கையில் நான் அடிக்கடி பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

புள்ளிகள்:

எத்தனை “ஆம்” பெற்றீர்கள் என உண்மையாகக் கணக்கிடுங்கள். நீங்கள் பெற்றுக் கொண்ட மொத்த எண்ணிக்கைக்கேற்ப கீழே தரப்பட்ட பந்தியை வாசியுங்கள்.

0 - 5:
நீங்கள் ஒரு இலகு பேஸ்புக் பயனாளர். இது உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

6 - 10:
பேஸ்புக் உங்கள் வாழ்க்கைச் செயற்பாட்டில் ஒரு பகுதியாகிவிட்டது. இப்போது நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்.

11 - 20:
உங்கள் பேஸ்புக் பாவனை ஆரோக்கியமானதல்ல அல்லது ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். நீங்கள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவது உண்மை வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

21+: 
உங்கள் வாழ்க்கை பேஸ்புக்கைச் சுற்றியிருக்கிறது. உங்களால் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பேஸ்புக்கை பயன்படுத்தாமலிருப்பது கடினமானது. உங்கள் உறவுகள், பாடசாலை அல்லது வேலை ஆகியன பேஸ்புக்கால் பாதிப்படையலாம். பேஸ்புக் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

மேற்காட்டப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டோமா? என சந்தேகப்படுபவர்கள் எவராக இருந்தாலும் இதில் பெறும் புள்ளிகள் மூலம் தம்மை சுயமாக கணிப்பிட்டுக்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமது ஆராய்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளனர்.

  • போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர்கள் எத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்பார்களோ அதே போன்ற அறிகுறிகளையே பேஸ்புக்கிற்கு அடிமையானவர்களும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
  • அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
  • பெரியோரை விட இளம்வயதினரே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாகவும், தாம் சமூக பாதுகாப்பற்றதாக இருக்கின்றோம் என உணர்பவர்கள் பேஸ்புக்கினை அதிகம் உபயோகிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 
  • பெண்கள் அதிகம் பேஸ்புக்கிற்கு அடிமையாவதாகவும், இப்பழக்கத்தினால் தூங்கும் நேரம்,காலையில் கண்விழிக்கும் நேரம் என அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)

முகநூல் வழியாக கீழே உள்ள ஒரு கருத்துச் சித்திரத்தைக் காண முடிந்தது. இஸ்லாம் எனும் நீரோட்டம் கிறிஸ்தவம் எனும் தடுப்பு அணையில் தடுக்கப்பட்டிருப்பதையும், அணைக்குப் இந்தப் பக்கம் குடியிருப்புக்கள் இருப்பதையும் காண முடிகிறது. அணையில் சிறிது வெடிப்பு இருப்பதையும் காண முடிகிறது.

இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)
இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)
இந்தப் படம் அதிகமாக மேலத்தேய முகநூல் பயனர்களிடம் பகிரப்பட்டது. இந்தக் கருத்துச் சித்திரத்தை கற்பனை கலந்து பார்த்தால், “ஐயோ, அணை உடைந்தால் அந்த அமைதியான இடத்தை நீர் மிகவும் ஆக்ரோசமாக அழித்துவிடுமே” என்று எண்ணத் தோன்றும். இதுதான் இன்றைய மேலத்தேய நாடுகளிலுள்ள மக்களிடம், பொதுவாக வலதுசாரிகளிடமும், தீவிர கிறிஸ்தவர்களிடமும் காணப்படும் கருத்தாகும்.

உலகம் முழுக்க ‘இஸ்லாமிய அச்சம்’ என்ற, ஆங்கிலத்தில் “இஸ்லாமேபோபியா” (Islamophobia) என்று அழைக்கப்படும் ஒருவித சமூக அச்சவுணர்வு அல்லது மனநிலை உள்ளது. மேலத்தேய கிறிஸ்தவர்கள், இந்திய இந்துக்கள், இலங்கை பௌத்தர்கள் என இந்த மனநிலை இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்படத் தூண்டுவது தவிர்க்க முடியாது. இதற்கான காரணம் முஸ்லிம்கள் மதம் பரப்புகிறார்கள், தங்கள் மதம், காலச்சாரம், பண்பாடு போன்ற இவர்களால் அழிக்கப்படும் என நம்புகிறார்கள். வரலாற்றில் இஸ்லாமைப் பின்பற்றியவர்கள் செய்த ஆக்கிரமிப்புப் போர்கள், குரான் குறிப்பிடும் சில “சிக்கல்” உள்ள வசனங்கள் என்பன இந்த மனநிலைக்குக் காரணமாகும். மேலும், தற்காலத்தில் இஸ்லாமின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள், தீவிரவாதச் செயற்பாடுகள், மதம் பரப்பல் செயற்பாடுகள் என்பன மேலும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

மேற்குலகைப் பொறுத்த வரை கிறிஸ்தவம் ஒருவித உறங்கு நிலையில் உள்ளது. பலர் கடவுள் இல்லை என்றோ அல்லது அதில் ஈடுபாடற்றுக் காணப்படுகின்றனர். அங்கு நாஸ்தீகருக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே கருத்தியல் சண்டை இடம்பெறுகின்றது. அங்கு செல்லும் முஸ்லிம் அகதிகள் எண்ணிக்கைப் பெருக்கம், அவர்கள் அங்கு தங்கள் சமய விடங்களுக்கு காட்டும் முன்னுரிமை என்பன அங்குள்ளவர்களைச் சினமூட்டுகிறது. வரலாற்றில், கிறிஸ்தவம் பலமடைந்ததும் ஐரோப்பாவில் இருந்த இஸ்லாமை விரட்டியது. அதன் பின் நடந்த கைத்தொழல் புரட்சி தனிநபர் சுதந்திரத்திற்கு வழி ஏற்படுத்தி, கிறிஸ்தவம் தன் கடுமையைக் குறைக்க வேண்டியதாற்று. அதன்பின் கிறிஸ்தவர்கள் பெயரளவுக் கிறிஸ்தவர்களாகவே வாழ்கின்றனர். அவர்கள் நினைப்பதுபோல், இஸ்லாம் அவர்கள் நாட்டை ஆக்கிரமித்து இஸ்லாமிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும்? தற்போதுள்ள சுதந்திரம் மறுக்கப்படும் என்பது முதல் உண்மை. அதன்பின் சமய, கலாச்சார இழப்புக்கள் ஏற்படும். ஆகவே இதற்கு பதிலடி கொடுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஆயுதம் “மதம்”.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் பல போர்களைச் செய்துள்ளது. வெற்றி, தோல்வி மாறி மாறி ஏற்பட்டாலும், இன்று வரையிலும் கிறிஸ்தவ அல்லது மேலத்தேய நாடுகளின் கையே ஓங்கியுள்ளது. இஸ்லாமியர்களை ஒன்றிணைப்பது அவர்கள் சமயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும். கிறிஸ்தவர்களில் பெரும்பாண்மையானோர் அவ்வாறு இல்லை. அவர்களைச் சார்ந்த பலர் இன்று நாஸ்தீகர் அல்லது சமயம் அற்றவர்கள். ஆகவே இஸ்லாமிய அச்சத்தில் (நீர்) இருந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையானது கிறிஸ்தவம் (அணை)  ஆகும். இதில் உள்ள சாத்தியத்தையும் உண்மையையும் மறுக்கவியலாது.

நேர்மையான மனிதன்

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இது. ஆணைப் பற்றிய அறிய பெண்களும் படிக்கலாம். பெண்கள் இதைப் படித்தால், ஆண் எவ்வளவு பெறுமதிமிக்கவன் என அறிந்து கொள்ளலாம். ஆண்கள் இதைப்ப படித்தால், படித்து முடிந்ததும் தங்களைப் பற்றி பெருமைப்படலாம்.

நேர்மையான மனிதன்
நேர்மையான மனிதன்
ஒருநாள் ஒரு விறகுவெட்டி ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தான். அப்போது தவறுதலாக அவனது கோடாரி ஆற்றில் விழுந்துவிட, அவன் சத்தமாக அழுதான். அப்போது கடவுள் அவ்விடத்தில் தோன்றி “ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார்.

விறகுவெட்டி பதிலாக தன் கோடாரி ஆற்றில் வீழ்ந்துவிட்டதையும், அது தன் உழைப்புக்கு மிகவும் முக்கியம் என்பதையும் கூறியனான்.

அதைக் கேட்ட கடவுள் ஆற்றினுள் மூழ்கி, ஒரு பொற்கோடாரியுடன் வெளியே வந்தார். “இதுதானா உன்னுடைய கோடாரி?” எனக்கேட்டார்.

“இல்லை” என்று பதிலளித்தான்.

மீண்டும் கடவுள் ஆற்றினுள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாரிடன் வெளியே வந்தார். “உன்னுடைய கோடாரி இதுவா?” எனக் கடவுள் கேட்டார்.

“இல்லை” என விறகுவெட்டி பதிலளித்தான்.

கடவுள் மூன்றாவது முறையாக ஆற்றினுள் மூழ்கி ஒரு இரும்புக் கோடாரியுடன் வந்தார். கடவள் “இதுதானா உன்னுடைய கோடாரி?” எனக்கேட்டார்.

அதற்கு அவன் “ஆம், இது என்னுடையதுதான்” என்று கூறினான்.

அந்த மனிதனின் நேர்மையால் நெகிழ்ந்துபோன கடவுள், முன்று கோடாரிகளையும் அவனிடம் கொடுத்தார். அவனும் மகிழ்ச்சியாக வீடு சென்றான்.

சிலநாட்களுக்குப் பிறகு, அந்த விறகு வெட்டி மனைவியுடன் ஆற்றங்கரையால் சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தவறி ஆற்றில் வீழ்ந்துவிட்டாள். அவன் அழுது கொண்டிருந்தான். அப்போது கடவுள் அங்கு வெளிப்பட்டு “ஏன் அழுது கொண்டிருக்கிறபாய்?” எனக் கேட்டார்.

“கடவுளே, ஆற்றில் என் மனைவி வீழ்ந்துவிட்டாள்” எனப் பதிலளித்தான்.

அதைக் கேட்ட கடவுள் ஆற்றினுள் இறங்கி, நயன்தாராவுடன் வெளியே வந்தார். “இவள்தானா உன்னுடைய மனைவி?” எனக்கேட்டார்.

“ஆம்” என அழுது கொண்டு பதிலளித்தான்.

கடவுள் கோபத்துடன் “நீ பொய் சொல்லிவிட்டாய்! இவன் உன் மனைவியல்ல!” என்றார்.

விறகுவெட்டி பதிலாக, “ஓ, கடவுளே! என்னை மன்னியுங்கள். என் மனைவி நயன்தாரா இல்லையென்று சொன்னால்? நீங்கள் இரண்டாவது முறை அனுஷ்காவுடன் வருவீர்கள். அதற்கும் நான் ‘இல்லை’ என்று பதிலளிக்க, நீங்கள் மூன்றாவது முறையாக என் மனைவியுடன் வருவீர்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்று பதிலளிக்க, நீங்கள் மூவரையும் என்னிடம் கொடுத்துவிடுவீர்கள். நானே ஒரு ஏழை. என்னால் மூவரையும் கவனிக்க முடியாது. அதனால்தான் நயன்தாராவைக் கண்டதும் ‘ஆம்’ என்று பதிலளித்தேன்” என்றான்.

இந்த கோடாரிக் கதையின் அல்லது விறகுவெட்டியின் கதையின் மூலம் அறியப்படுவது என்னவெனில்; ஆண் பொய் சொல்லும்போது அது நல்லதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். இது மற்றவர்களின் நன்மைக்காகவும் அமையும்.

சோகமான காதல் கதை

ஒரு அழகான கிராமம். அக்கிராமத்தின் தலைவருக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பேரூந்து மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

சோகமான காதல் கதை

நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.


அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது, "லூசாடி நீ! கற போக, சேஃப் எக்ஸல் போடு" என்றது.

இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. சோகக் கதை என நினைத்து வாசித்த எனக்கு, அதன் முடிவு தந்த நகைச்சுவையும், வியாபார உத்தியும் பாராட்டுக்குரியதாய் இருந்ததால் இங்கு மீள் பதிவிடுகிறேன். இதன் ஆக்குனர் யார் என்று தெரியாது.