இயேசு

திருநெல்வேலியில் நாடார் சமூகத்தவர் அதிகமாக கிறிஸ்தவத்தை ஏற்றதால்,
அங்கு இயேசு நாதர் கிடையாது, இயேசு நாடார் தான்.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால்,
கிறிஸ்துவைக் கோனாராகக் கருதலாம்.

அவர் மீன் உணவை எல்லாருக்கும் கொடுத்ததால்,
மீனவராகவும் கருதலாம்.

தச்சு வேலை செய்ததால்,
ஆசாரி என்று அன்போடும்,
விஸ்வகர்மா என்று வீம்பாகவும் கருதலாம்.

எல்லோருக்கும் நற்செய்தியை அறிவித்ததால்,
பறையராகவும் இருக்கலாம்.

இயேசுவை, ஈசா நபி என்பதால்,
இஸ்லாமியராகவும் இருக்கலாம்.

மனிதனை மண்ணில் இருந்து படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதால், குயவராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் சுத்தப்படுத்தியதால்,
அருந்ததியராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் குணப்படுத்தியதால்,
மருத்துவராகவும் இருக்கலாம்.

கோதுமைக் கதிர்களை அறுத்ததால்,
பள்ளராக இருக்கலாம்.

தேவ மைந்தன் என்று அழைக்கப் படுவதால்,
தேவராகவும் இருக்கலாம்.

குருமார்களை சாட்டையால் அடித்ததால்,
அன்றையப் பெரியாராகவும் இருக்கலாம்.

அப்பத்தையும், மீன்களையும் எல்லோருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுத்ததால்,
கம்யூனிஸ்டாகவும் இருக்கலாம்.

ஜீசஸ் கிரைஸ்ட் என்பதை, இயேசு நாதர் என்று மொழி பெயர்த்தது யார்?
ஈச நாதன் என்ற சைவத்தொணி தூக்கலாக இருக்கிறது.
அதனால், பிள்ளைமாராகக் கருதலாம்.

பரதவர்கள் முதன்முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள்.
நெய்தல் குடிகளை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாய் தான்,
63 நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அதிபத்தர்,
பரதவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கிறார்.

இந்தியக் கிறிஸ்தவர்களே!
சாதியை விட்டொழியுங்கள்.
அதுவரை உங்களுக்கு இயேசு பிறக்கப் போவதே இல்லை.
உங்களைக் காக்கப் போவதும் இல்லை.

இங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது.
சாதிக் கிறிஸ்தவர்களே உண்டு.
கர்த்தர் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டார்.
ஆமென்.

படித்ததில் பிடித்தது.....

26 வார்த்தைகள்

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விடயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

படித்ததில் பிடித்தது.....

ஆண்

ஆண்களை பற்றி....
ஆண்

ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்.

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

அவன் வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
'அம்மா பையன்' என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்
பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...

ஆண்
அழத் தெரியாதவன் அல்ல

கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..


கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன்.

விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல்: உண்மை சம்பவம்

“விட்டுக்கொடுக்குறதாலேயோ, அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்ன இலாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்?
அப்படியானால், இந்தப் பதிவு உங்களுக்கு அவசியம்.

“என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால் என்ன புண்ணியம்?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான்.

“வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம். வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்”என்ற கொள்கையுடையவரா நீங்கள்? இந்தப் பதிவின் அவசியம் உங்களுக்கும் தான்.

உதவி செய்தல்

1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது முகாமையாளரோ “ஐயா வருவார். ஆனால் நீங்கள் அவருக்கு $2,000 தரவேண்டும்”என்று கூற, இவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை பிரபலமாக்க முடிவு செய்து, அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால், எதிர்பார்த்தபடி நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்”என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1,600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு காசோலை கொடுத்துவிடுகிறோம். விரைவில் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்”என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போட்ட பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம் விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதனால் நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் கெட்ட காலம் முதலாம் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் இலட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை (ARA - American Relief Administration)அணுகுகிறார். அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர் (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்).

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு, தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“இல்லை… இல்லை… நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியைத்தான் நான் உங்களுக்கு திருப்பிச் செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் பணம் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி ஆணைக்குழு ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF, CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில், விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே! காலம் குறித்து வைத்துகொண்டது..

நன்றி: முகநூல் பதிவு

தன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் வெற்றி

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.

“வெற்றிக்கு யார் வழிகாட்டி” என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.
தன்னம்பிக்கை

அவர் காட்டிய திசையில், தங்க சட்டமிடப்பட்ட பென்சில் ஒளிப்படம் இருந்தது.

நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு 5 விடயங்களைக் கற்றுத் தந்தது.

பல விடயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது

அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.

தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது. வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.

பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.

தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.

வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.

கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விடயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது.

நன்றி: முகநூல் பதிவு

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள்

முகநூல் வழியாக பெறப்பட்ட வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள் என்ற இக்கருத்துக்கள் மீளவும் இங்கு பதிவிடப்படுகின்றன.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. மீண்டும் அது நமக்கு நேர்ந்துவிடக்கூடாது.


யாரையும் குறைவாக மதிப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஏதாவது ஒன்று இருக்கும்.

நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும், அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள். உங்கள் மனம் தெளிவாக இருக்கட்டும்.

'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை வளம் பெற ஆரம்பிக்கும்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். மற்றவர்களுக்காக வாழ முடியாது.

நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால், சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு
என்பது அதுதான்.

சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

பிறரை ஒதுக்கி வைக்கு முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் ஒதுக்கி வைத்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று சிந்தியுங்கள்.

எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்.

உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்.

தமிழ்த் தேசியம் என்பது இந்தியத் தேசியம் அல்ல

தினமணி நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” என்ற கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு”என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை”என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை”என்றும் எழுதியுள்ளார்.

தமிழ்த் தேசியம்
தமிழ்த் தேசியம்

அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள். தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாததுதான்.


இதோ காலஞ்சென்ற பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறுகிறார் :
“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.
- தெய்வத்தின் குரல், பாகம் – 1, பக்கம் 267.

மேலும் சொல்கிறார் :
“எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு ‘இந்து’என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியதேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.

பழங்காலத்தில் “பாரததேசம்” என்ற பெயரில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு தேசமாக இருந்ததாக ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதற்கான இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

இன்று இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பகுதியில் பழங்காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாக “மகாபாராதம்” கூறுகின்றது.

1918 இல் வெளிவந்த, “புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்” என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.வி. ஜகதீச ஐயர், 56 தேசங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், குருதேசம், சூரசேனதேசம் என்று தொடங்கி 56 ஆவது தேசமாக கர்னாடக தேசம் குறிப்பிடப்படுகிறது. அந்த 56 இல் சீனதேசம், பாஞ்சாலதேசம், பாரசீக தேசம், காந்தார தேசம், காம்போஜ தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம் போன்றவை இருக்கின்றன. ஆனால், பாரததேசம் என்பது இல்லை.

வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனி தான் கைப்பற்றிய தனித்தனி நாடுகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முதல் முதலாக 1773 இல் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) இயற்றியது. அதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ அல்லது பாரதம் என்ற பெயரிலோ இந்த நிலப்பகுதி ஒரே நாடாக – ஒரே தேசமாக இருந்ததே இல்லை. வெள்ளைக்காரர் உள்ளிட்ட மேற்கத்தியர் சிந்து ஆற்றின் பெயரை அடையாளமாகக் கொண்டுதான் இந்தியா, இந்து என்ற பெயர்களை உருவாக்கினார்கள்.

இலக்கியங்களில் தமிழ்நாடு
தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்பு இல்லை என்கிறார் அர்ஜூன் சம்பத். இதோ இருந்ததற்கான சான்றுகள் :

“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…” – புறநானூறு, 168.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..” – அகநானூறு, 227.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..” – பரிபாடல், 410.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..” – சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.

“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..” – கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்” – சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.

“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு” – பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.

தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார்.

“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார்.

உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார்.

தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது.

“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து” – புறம், 19.

தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது.

“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.

அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்ததமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப் பட்டார்.

எனவே இலக்கியங்களில் தமிழர் என்ற இனம் குறிக்கப்படவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறுவது சரியன்று.

தேசிய இன வரையறை

“வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் தேசிய இனம் அமையாது” என்கிறார் அர்ஜூன் சம்பத். ஆனால், இவர் சார்ந்துள்ள இந்துத்துவா அமைப்பு இல்லாத இந்தியத்தேசிய இனத்திற்கு இந்தி மற்றும் சமற்கிருதம் இரண்டையும் ஏற்றாக வேண்டும் என்று நிபந்தனை போடுகிறது. இனம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை உருவாவதற்கான முதன்மைக் கூறு தாய்மொழி. கிரேக்கர், ஆங்கிலேயர், பிரஞ்சியர், சப்பானியர் போன்ற தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின. அர்ஜூன் சம்பத் சொல்வதுபோல், மொழி வெறும் கருவியன்று.

தாய்மொழி, தாயகம், பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டு, வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் “நாம் ஓரினம்” என்ற மனப்பாங்கு வளரப் பெறுகின்றனர். இதற்கு முன் நிபந்தனையாக இனக்குழு (Ethinicity) மரபு உருவாகிறது. இனக்குழு மரபிலிருந்து ஒரு மூல மொழி தொடர்கிறது. தமிழர்களுக்கு மூலமொழியாகவும் (Dialect) வளர்ச்சியடைந்த பொது மொழியாகவும் (Standard Language) இருப்பது தமிழே.

தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுடன் தனித்தனி தேசங்கள் அமைவது 18 – 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதனால், தேசிய இன உணர்வே அதன்பிறகுதான் உருவானது என்று கொள்ளக் கூடாது. யூதர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்தது. தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்ததால்தான், இன அடிப்படையிலான தாயக எல்லையாக வடவேங்கடம் குமரிமுனை இடையிலுள்ள தமிழ் பேசும் பகுதியை தொல்காப்பியம் பாயிரத்தில் பணம்பாரனார் கூறினார். அதேபோல், தமிழகம் – தமிழ்நாடு – தமிழர் என்ற இன உணர்வு வெளிப்பாடுகள் சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்களுக்குத் தொடர்கிறது.

மதம் ஒரு தேசியத்திற்கோ அல்லது தேசிய இனத்திற்கோ அடிப்படைக் கூறாக அமைவதில்லை. மதம் – ஒரு மெய்யியல் என்ற அளவில் இனம் கடந்து, மொழி கடந்து பரவும். ஐரோப்பா ஒரே கிறித்துவ தேசமாக அமையவில்லை. அரபு நாடுகள் ஒரே இசுலாமிய தேசமாக அமையவில்லை. மதம் ஒன்றாக இருந்தாலும், மொழி இன அடிப்படையில் அவை தனித்தனி நாடுகளாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முதன்மை கொடுத்த இந்து நாடு - நேப்பாளம். இப்போது புதிதாக வந்துள்ள அரசமைப்புச் சட்டத்தில்தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், “இந்துதேசம்” என்று இந்தியாவை அழைக்க விரும்புவோர் நேப்பாளமும் இந்தியாவும் தனித்தனி நாடாக இருப்பதை உணர வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் குறிப்பிடுகிறது (உறுப்பு – 1). ‘இந்தியன்’ (Indian) என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது வரையறை செய்கிறது.

இல்லாத இந்திய தேசியத்தை – இந்து தேசியமாக மாற்றிக் கொண்டு, தமிழ்த்தேசிய இனம் போன்ற இயற்கையான இனங்களின் மொழி, பண்பாடு, அரசுரிமைகள் முதலியவற்றை மறுக்கக் கூடாது. இந்தியா ஒரு நிர்வாகக் கட்டமைப்பு; அதில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

தோழர் பெ. மணியரசன்
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பின் குறிப்பு: இக்கட்டுரை எமது ஆக்கம் அல்ல. முகநூல் பதிவு ஒன்றில் இதனைக் காண நேர்ந்தது. ஆனாலும், கட்டுரையின் சிறப்புக் கருதி மீள் பதிவு செய்கிறோம். இதனை முடியுமான மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரலாற்றை மாற்று முயல்வது நமக்கு வரலாறு தெரியாததால் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி தோழர் பெ. மணியரசன்

ஏழு உலக அதிசயங்கள்

பாடசாலை வகுப்பு ஒன்றில் தற்போதைய ஏழு உலக அதிசயங்களையும் பட்டியலிடுமாறு ஆசிரியர் கேட்டிருந்தார். மாணவர்கள் பின்வருவம் 7 உலக அதிசயங்களையும் பட்டியலிட்டு இருந்தனர். ஆனாலும், எவை என்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. பின்வரும் ஏழு அதிசங்கள் பட்டியலிடப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட இருந்தன.

ஏழு உலக அதிசயங்கள்

  1. எகிப்தின் பிரமிடுகள்
  2. தாஜ்மகால்
  3. பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு, ஐக்கிய அமெரிக்கா
  4. பனாமா கால்வாய்
  5. எம்பயர் ஸ்டேட் கட்டடம், ஐக்கிய அமெரிக்கா
  6. புனித பேருது பசிலிக்கா தேவாலயம், வத்திக்கான்
  7. சீனப் பெருஞ்சுவர்


வாக்களிப்பு நடத்த முன், ஒரு மாணவர் மட்டும் பட்டியலை முடிவு செய்யாமல் இருப்பதை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவரிடம் பட்டியலிடுவதில் சிக்கல் உள்ளதான என வினவினார், அம்மாணவர் "ஆம், பல இருப்பதால் எதை சேர்ப்பது விடுவது என்ற குழப்பம் இருக்கின்றது" என்றார். ஆசிரியர் "பரவாயில்லை, உன் பட்டியலை எங்களுக்குச் சொல், நாங்கள் உதவி செய்வோம்" என்றார். தயக்கத்துடன் அம்மாணவர் பின்வருவனவற்றை சொல்லத் தொடங்கினார்.
  1. பார்த்தல்
  2. கேட்டல்
  3. தொடுதல்
  4. உணர்தல்
  5. சுவைத்தல்
  6. மணத்தல்
  7. அன்பு செய்தல்

அந்த வகுப்பறையில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

நாம் சாதாரணமாகவும் வழமையானதாகவும் காணும் விடயங்கள் உண்மையில் அதிசயங்கள். மிகவும் விலைமதிக்க முடியாதவற்றை மனிதனால் உருவாகக் முடியாது.

புனித பாதச்சுவடு

ஆதாமின் சிகரம் (Adam’s Peak), ஆதம் மலை, சிவனொளி பாதமலை, சிறிபாத மலை (Sri Pada)  என்றெல்லாம் அழைக்கப்படும் மலை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் ஆகிய சமயத்தவர்களின் முக்கிய இடமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் சப்ரகமுவ மாகாணத்திற்கும் இடையில் காணப்படும் மலை உச்சியில் சுமார் 5.5 அடி நீளத்திலும் 2.5 அடி அகலத்திலும் பாதச்சுவடை ஒத்த ஓர் அமைப்பு காணப்படுகின்றது. இந்த பாதச்சுவடு புத்தருடையது என பௌத்தர்களும், சிவனுடையது என இந்துக்களும், ஆதமுடையது என இஸ்லாமியரும், இயேசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையாருடையது என கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர்.

புனித பாதச்சுவடு

பௌத்த நம்பிக்கையின்படி புத்தர் 35 அடி உயரம் உள்ளவர். ஆகவே அவருக்கு 5.5 அடி நீளமான பாதம் இருந்தது எனவும் நம்புகின்றனர். புத்தர் இலங்கைக்கு வந்தபோது அம்மலையில் தனது கால் தடத்தைப் பதித்தார் என பௌத்தர் நம்புகின்றனர். சங்கு, சக்கரம் போன்ற சின்னங்கள் புத்தரின் கால் தட சிற்பத்தில் காணப்படுவதுண்டு. சிறிபாத மலையில் உள்ள கால் தடத்திலும் இவ்வாறான சின்னங்கள் காணப்படுவதால் அது புத்தரின் கால்த்தடம் என பௌத்தர் நம்புகின்றனர். ஆனாலும் புத்தர் இலங்கை வந்தது பற்றிய நம்பகத்தன்மையில் கேள்விகள் உள்ளதால், இது புத்தரின் கால்த்தடந்தானா என்ற ஐயம் உள்ளது.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, ஆதம் மலையில் இருப்பது இறைவனால்
படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதமின் கால்த்தடம் ஆகும். இறைவனின் சாபத்தால் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஏவாளுடன் பூமிக்கு வந்தபொழுது இந்த ஆதம் மலையில்தான் முதன்முதலில் தங்கினார் என நம்பப்படுகின்றது. இந்த முதல் மனிதன் 30 அடி உயரம் உள்ளவர் என நம்பப்படுகின்றது. ஆனாலும் இது பற்றி குரானில் எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே, ஆதமின் கால்த்தடம் என்பது கேள்விக்குட்படுகின்றது. (ஆதம் என்பவரை ஆதாம் என கிறிஸ்தவர்கள் அழைப்பர்.)

கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கையின்படி, இயேசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமாவின் கால்த்தடம் என நம்பப்படுகின்றது. எனினும், புனித தோமா இலங்கைக்கு வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. மேலும், தோமாவும் நம்மைப் போன்ற பாத அளவையே கொண்டிருப்பதால், இந்த கால்த்தடம் அவருடையதுதானா என்பதில் கேள்வி எழுகின்றது. அத்துடன் கிறிஸ்தவர்கள் முதல் மனிதனான ஆதாமின் கால் தடம் அது என முஸ்லிம்களைப் போல நம்பிக்கை கொண்டிருந்தாலும், இது தொடர்பில் விவிலிய, கிறிஸ்தவ நூல்களும் எதுவும் கூறவில்லை.

இந்துக்களின் நம்பிக்கையின்படி, இங்குள்ள பாதம் சிவனுடையது என தெரிவிக்கப்படுகின்றது. முருகன் சூரபத்மனை அழித்தபோது சிவன் இந்த மலையில் இருந்து அதனைக்கண்டார் எனவும், அப்போது இந்த மிகப்பெரிய கால்த்தடமும் உருவானது என நம்புகின்றனர். ஆனாலும் இதற்கும் எவ்வித புராண குறிப்புக்களோ, இந்து சமய நூல் ஆதாரங்களோ, வரலாற்றுக் குறிப்புக்களோ இல்லை. எனவே சிவனுடைய பாதம் என்பதில் ஐயம் உள்ளது.

அப்போது யாருடையதுதான் இந்தப்பாதம்? இது இயற்கையாக உருவான பாத அமைப்பாகவோ அல்லது புராதன காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாதச்சுவடு அமைப்பாகவோ இருக்கலாம். ஆனால், இந்த நான்கு சமயத்தவரும் அது தங்களுடையது என உரிமை கோருவதிலும், தங்களுக்கு இலங்கையில் மிகப்பழைய வரலாறு உள்ளது என காண்பிப்பதிலும் அக்கறை கொண்டு, உருவாக்கப்பட்டகட்டுக்கதைதான் ஆதாமின் சிகரம், ஆதம் மலை, சிவனொளி பாதமலை, சிறிபாத மலை என்ற பெயர்கள். அறிவியலின்படி, எந்த மனிதனும் 30-35 அடி உயரத்தைக் கொண்டிருக்கவில்லை. கடவுளின் பாதந்தான் அது என்றால், அதை உறுதி செய்யும் எந்தக் குறிப்புகளும் சமய நூல்களிலேயே இல்லை.

பதட்டமும் மன உளைச்சலும்

மாவீரன் நெப்போலியன் உலகத்தையே வெல்ல நினைத்து போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றாலும், கடைசியில் பிரித்தானியாவிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரித்தானியா சிறைப்பிடித்து செயிண்ட் ஹெலெனா தீவில் தனிச்சிறையில், தனிமையில் வைத்தது.

பதட்டமும் மன உளைச்சலும்

நெப்போலியனின் கடைசிக் காலம் சிறையில் மன உளைச்சலில் கழிந்தது. அவரை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.

ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த நெப்போலியனுக்கு சிந்தனை செயல்படாமல், சதுரங்க அட்டை மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட அதை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அது அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து, அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் வல்லமை கொண்டது எலி. ஆனால், மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு, அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னும் பின்னும் பதட்டத்துடன் திரிந்து, சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயற்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.

சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமா? பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருங்கள். நிச்சயம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடைகான தெளிவான, பதட்டம் அற்ற மனத்தினால் முடியும். சாமானியனும் மாவீரன் ஆகலாம்!

மானம்

மானம் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று. மானமே வாழ்வின் உயிர் நிலையெனக் கொண்டு வாழ்ந்தவர் தமிழர். மானமானது தன் நிலையில் தாழாமையும் தாழ்வு வந்தபோது உயிர் வாழாமையும் ஆகும். ஒவ்வொருவர்க்கும் சிற்சில தகுதிகள், கடமைகள் உள்ளன. அவை அவர் பிறந்த குடிப்பிறப்பால், மேற்கொண்ட பொறுப்புகளால் கற்ற கல்வியால் ஏற்பட்ட தகுதிகளாகும். எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதும் அத்தகுதியிலிருந்து தாழ்தல் கூடாது. உயிரினும் மானம் சிறந்தது. மானம் இழந்தால் உயிர் வாழலாம்; அன்றி உயிர் இழந்தால் மானத்தைக் காக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டபோது உயிரைக் கொடுத்தேனும் மானத்தைக் காக்க வேண்டும். ‘மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே’ என்பது தமிழ்நெறி.

மானம்

திருக்குறள்: வள்ளுவர் கூறிய மானம்

மானத்தின் பெருமையை வள்ளுவர் சிறந்த முறையில் எடுத்து விளக்கியுள்ளார். பெற்ற தாயும் உற்ற மனைவியும் அன்புக் குழந்தைகளும் பசியால் துடிக்கும்போது எத்தகைய இழி செயல் புரிந்தேனும் அவர்களைக் காக்கலாம் என்று அறநூல்கள் கூறும். ஆனால் தமிழ்ப் பண்பாட்டு முறையில் அறத்தை வலியுறுத்திய வள்ளுவப் பெருந்தகையாரோ,

“ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”

“இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்”


என எந்த நிலையிலும் பழிச் செயல் புரிய முற்படலாகாது என்று வற்புறுத்துவதன் வாயிலாக மானத்தின் உயர்வை அறிவுறுத்தியுள்ளார். ‘பெற்ற தாய் பசியால் துடிக்கக் கண்டாலும் சான்றோர் பழிக்கும் மானம் இழந்த செயலைச் செய்து அவளை வாழ வைக்க முற்படலாகாது’ என்றும், ‘ஒரு செயல் எவ்வளவு இன்றியமையாதது ஆயினும் அதனைச் செய்தால் தன்னுடைய மானத்தை இழக்கும் நிலை ஏற்படுமானால் அதனைச் செய்யா தொழிக’ என்றும் வள்ளுவர் பணித்துள்ளார்.

மான வீரம்

இங்ஙனம் பழிச் செயல் புரியாமல் மானம் காக்கும் நெறியில் மற்றையவரினும மேம்பட்டு நிற்கும் நிலையே மான வீரமாகும். கவரிமான் என்பது ஒரு வகை மான். அது தன் உடலிலிருந்து ஒரு மயிர் உதிரப் பெற்றாலும் அதனைப் பொறாது உயிர் விடுமாம். ஆகவே வள்ளுவர் மான வீரத்துக்கு அதனை உவமையாக எடுத்துக் கொண்டார்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம்வரின்”

என்பது அவர் வாக்கு. மானத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும் போது மானமே பெரிதென மதிப்பவர் தம் உயிரைப் பொருட்படுத்த மாட்டார். ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்பது பழமொழி. ஆனால் மானமோ என்றும் அழியாதது. அழியக்கூடிய வாழ்வை விரும்பி என்றும் அழியாத மானத்தைத் துறக்க முற்படாதவரே சான்றோராவர். இத்தகைய மான வீரம் வாய்ந்தவர்களில் சிறப்பாக மதிக்கத்தக்கவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னனாவான். அவனுடைய மான வீரத்தை இங்கு காண்போம்.

குறிப்பு: மின்னஞ்சல் குழுவின் மூலம் பெறப்பட்ட இவ்வாக்கம், இதன் சிறப்புக் கருதி மீள் பதிப்பிடப்படுகின்றது.

ஊகம்

தொடர்பாடலும் ஊகமும் பிழைத்துவிடலாம். ஆகவே, ஊகிக்க முதல் கவனிக்க வேண்டியது முக்கியம். ஒரு குடும்பத்தில் நடந்த பின்வரும் உரையாடலைக் கவனியுங்கள்.

ஊகம்

மகன்: அம்மா, எனக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது.

அம்மா: ஓ! கடவுளே, மகனே உனக்கு இப்போது 6 வயதுதான் ஆகிறது.

தன் கணவன் பக்கம் கோபத்துடன் திரும்பியவர்...

அம்மா: இது உங்கள் பிழை.

அப்பா: என்னுடைய பிழையா? அவனுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரம் செலவிட்டிருக்கலாம்.

அம்மா: நம்முடைய ஆறு வயதுப் பையனுக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது! அவன் உங்களைப் பார்த்து வளரக்கூடாது!!


அப்பா: நான் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், குடும்பத்திற்காக உழைத்த எனக்கு இது கிடைத்த பரிசு இதுதான். நான் போகிறேன்.

அம்மா: நல்லது!

இதனைக் கேட்ட கணவன் வேகமாக வெளியே செல்கிறார்.

அம்மா:  எனக்கு நீங்கள் தேவையில்லை. எனது மகனுக்கும் தேவையில்லை!

தன் மகனை அணைத்தவாறு...

அம்மா: அழாதே மகனே, உங்கள் அப்பா இல்லாமலேயே எல்லாம் சரியாகிவிடும். உன் தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் சொல்லு மகனே.

சிறுவன் அழுகிறான்.

அம்மா:என்னிடம் பேசு. தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் பேசு.

சிறுவன் தன் பாடசாலை புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறான்.

மகன்: கோகுலன் ஒரு லீட்டர் தண்ணீரும், காந்தன் இரண்டு லீட்டர் தண்ணீரும் குடித்தால், இருவரும் சேர்ந்து குடித்த குடித்த மொத்த தண்ணீர் எவ்வளவு?

எது கலாச்சாரச் சீரழிவு?

கலாச்சாரச் சீரழிவு, பண்பாடு அழிவு, மேலைத்தேய மோகம், மேலைத்தேய வாழ்க்கை முறைச் சீர்கேடு, வெளிநாட்டு நாகழீக மோகம் போன்றவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அந்தப்படத்தை நீங்களும் காணுங்கள்.

கலாச்சாரச் சீரழிவு
கலாச்சாரச் சீரழிவு

வெளிநாட்டவர் இருவர் (நம்மூர் ஆட்களாகவும் இருக்கலாம்) பொது இடத்தில் வைத்து முத்தமிடுகின்றனர். அதே பொது இடத்தில் வைத்து நம்மூர் ஆள் சிறுநீர் கழிக்கையில் அந்த வழியால் பெண் ஒருவர் சங்கடத்துடன் செல்கிறார். சிறுநீர் கழிக்கும் நபர் "வெட்கமே இல்லாமல் இந்த வெள்ளைக்காரன் பொது இடத்தில் வைத்து முத்தமிடுகிறான்" என தன் மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு மேலைத்தேய கலாச்சாரச் சீரழிவாகத் தெரியலாம்.


இதில் எது உங்களுக்கு கலாச்சார சீர்கேடாகத் தெரிகிறது? முத்தமிடுபவரா? சிறுநீர் கழிப்பவரா? முத்தமிடுபவர் என்றால் நீங்கள் கட்டாயம் பகுத்தறிவில் வளர வேண்டியவர். வீதி ஓரங்களில், தெரு முனைகளில் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் இருக்கும் வரை நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்றன சீர்கெட்டுத்தான் உள்ளது. அவர்கள் அவ்வழியால் செல்லும் பெண்கள், பெரியவர், சிறுவர் போன்ற பலதரப்பட்டவர்களின் மனநிலை பற்றிய யோசித்திருப்பார்களா? ஏன் சக ஆண்களில் பலருக்கு இது சங்கடமானது என்பதை அறிவீர்களா?

வெளிநாட்டவர் கலாச்சாரம், பண்பாடு போன்றன சரியானது என்றோ, மேலைத்தேய கலாச்சாரம் சிறப்பானது என்றோ கருதவில்லை. ஆனால், பிழைகளை நாம் வைத்துக் கொண்டு மற்றவரை விமர்சிப்பது, ஏளனம் செய்வதும் தவறானது. இதனால், நாம் வளரப் போவதில்லை. “இறால் தன் தலைக்குள் ஊத்தையை வைத்துக் கொண்டு, மற்றவரில் ஊத்தை உள்ளது” என்று சொல்லுமாம் என்ற நாட்டார் பழமொழி உள்ளது. இவ்வாறுதான் நாமும் இருந்தால் கலாச்சாரச் சீரழிவு செய்வது வேறு யாருமல்ல. நீங்கள்தான்!

வாழ்க்கைத் தத்துவம்

மனித வாழ்க்கை விடை காண முடியாத பல கேள்வி முடிச்சுக்களைக் கொண்டது. அதனால்தான் என்னவோ வாழ்க்கைத் தத்துவம் நமக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. சிலபேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வாழ்க்கை மிகவும் இலகுவாகச் செல்லும். அவர்கள் அதிகம் கல்வி கற்றிருக்க மாட்டார்கள். அதிக பணம் கிடைக்கும் வேலை இல்லை. ஒரு சாதாரண நபராகவே வாழ்வார். சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கை நமக்குப் பிடித்திருக்கும். இந்த அலைச்சலான வாழ்க்கையைவிட, அந்த இலகுவான வாழ்கையை நாம் விரும்பலாம்.

வாழ்க்கைத் தத்துவம்
வாழ்க்கைத் தத்துவம்

இந்தப் படத்தைப் பாருங்கள். கோணலாகிப் போன ஆணிகள் விடப்பட்டு நேரான ஆணி மட்டுமே அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பயனுள்ளவரானால் கட்டாயம் உலகம் உங்களை உபயோகப்படுத்தும். ஆகவே, உங்களுக்கு சுமையும் அழுத்தங்களும் அதிகரிக்கும். உபயோகம் இல்லை என்றால் காசிகூட காட்சிப் பொருள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காய் உள்ள மரத்திற்குத்தானே கல்லடிபடும்.

இன்னுமொரு கோணத்தில் இதைப் பார்த்தால், நேரான நபர்தான் இன்றைய உலகிற்குத் தேவை. உங்களைத்தான் இந்த உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, சுத்தியல் அடிபோல் வலிகள் உங்கள் மேல் இறங்கத்தான் செய்யும். உங்கள் நேர்மைதான் உங்களை வாழ வைக்கிறது. கோணலான மனிதர்கள் தங்களுக்கு சுமை இல்லையே என மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், ஒரு பெட்டியை உருவாக்கவோ அல்லது வேறு ஏதாவது முக்கிய பொருளை உருவாக்கவோ நேரன ஆணி போன்ற நபர் கட்டாயம் தேவை. இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

கிறிஸ்தவம், இஸ்லாம் மீதான இந்துக்களின் விமர்சனம்

முகநூலில் இந்து சமயவாதிகளால் கிறிஸ்தவம், இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் பின்வருமாறு: (கிறிஸ்தவம், இஸ்லாம் தொடர்பில் பதியப்பட்ட கருத்துக்கள் மாறாமல், பிழையான சொல்லாடல்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.)

இந்துக்களின் விமர்சனம்
மெய்ப்பொருள் காண்பதே அறிவு

கிறிஸ்தவம்:

கடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம் (விவிலியம் ), உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்).

ஆனால், கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கிறிஸ்தவ" பிரிவு தேவாலயம் செல்வதில்லை.

அவ்வாறே மற்றவர்கள் " பெந்தகொஸ்தே" திருச்சபைக்குள் நுழைவதில்லை.

பிற கிறிஸ்தவ பிரிவினர் "இரட்சணிய சேனை" தேவாலயத்துக்குள் செல்வதில்லை.

இவ்வாறு ஒரு பிரிவினர் மற்றய பிரிவினர் தேவாலயம் செல்வதில்லை.

சுமார் 100 இற்கு மேற்பட்ட பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுகின்றன.

ஆனால், கடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், உலகெங்கும் ஒரே மதம் எனக் கூறிக் கொள்வர்.

இஸ்லாம்:
"அல்லாஹ்" ஒருவனே கடவுள், ஒரே மதப் புத்தகம் (குர் ஆன்), ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்.

ஆனால், இந்த ஒரு மதத்திற்குள்ளே "ஷியா " மற்றும் "சுன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொல்வதும் அனைத்து சாதாரணம். 

"ஷியா" பிரிவு முஸ்லீம்கள் "சுன்னி " பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழைவதில்லை.

இவ்வாறு, "அஹமதியா", "சூபி", "முஜாஹைதீன் " என பிரதான, துணை பிரிவுகள் என பல பிரிவுகள் இஸ்லாம் மதத்தில் உண்டு.

அமெரிக்கா ஈராக்கை தாக்க ஈராக்கை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே ஈரானுக்கு எதிராக பல சவுதி அரேபியா உட்பட்ட பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன.

ஆனால், கடவுள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் முகம்மது எனக் கூறிக் கொள்வர்.

இந்து மதம்:
இந்து மதத்தில் சுமார் 1280 மதப் புத்தகங்கள், 10000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.

ஆனாலும், எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம். இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.

உண்மை நிலை
இதனை பல இந்துக்கள் முகநூலில் பகிர்ந்தும், விருப்பம் தெரிவித்தும், புகழ்பாடியும் இருந்தனர். இவர்கள் அணைவரும் இந்து சமயம் பற்றி அறியாத இந்துக்கள்.

இந்து சமயம் என்பது பல சமயப் பிரிவுகளின் தொகுப்பு ஆகும். பொதுவாக சைவ, வைணவ, சமண மதங்களின் சண்டை, மற்ற உள் மதச் சண்டைகளுக்கு சளைத்தவை அல்ல. எந்த சைவ சமயத்தவனும் விஷ்ணுவை முதற் கடவுளாகக் கொள்வானா? எந்த வைணவனும் விஷ்ணுவைவிட சிவன் மேல் என்பானா? பட்டையா? நாமமா என்பதில் விட்டுக் கொடுப்பீர்களா? சைவர்கள் வைணவ, சமண மதங்களை அழித்த கதை தெரியுமா? அவ்வாறு வைணவ சைவர்களை தாழ்ந்தவராக நோக்கும் நிலை உங்களுக்குத் தெரியுமா?

இராமாயணம், மகாபாரதம் என்பன விஷ்ணு புகழ் பாட எழுதப்பட்டவை. இவற்றில் கதாநாயகன் விஷ்ணுவின் அவதாரங்களேயன்றி, சிவன் அல்ல. மேலும், தமிழர்களின் ஆதி வழிபாடு நாட்டார் தெய்வங்கள் எனப்பட்ட சிறு தெய்வங்களாகும். பின்னாளில் சைவம், இந்து என தமிழர் உள்வாங்கப்பட்டனர்.

உலகில் கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தாக்கப்பட்டால், அவர்கள் குரல் கொடுக்க பின் நிற்பதில்லை. ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் சைவர்கள் அழிக்கப்பட்டபோது இந்து மதம் என்ற போர்வையில் இருந்த ஆளும் வைணவர்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டும் நில்லாமல், தமிழ் சைவர்கள் அழிவுக்கும் காரணமான கதை தெரியுமா?

கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயப் பிரிவு வழிபாட்டிடங்களுக்கு மற்ற பிரிவினர் செல்வதைத் தவிர்ப்பர். ஏன் ஒரு கிறிஸ்தவன் மசூதிக்குச் செல்லலாம். அவ்வாறே, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் செல்லலாம். இதில் தடை ஏதும் இல்லை. ஆனால், இந்து சமயத்தில் சாதி வாரியாக கோயில்கள் உள்ளன. ஒரு சாதி கோயிலுக்கு மற்ற சாதியினர் செல்லக் கூடாது. இந்து சமய மநுநீதி நூல் மனிதர்களை தொழில் முறை மூலம் சாதியாகப் பிரித்த அநீதியை நீங்கள் நீதி என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஒரு இந்து தலித் என்றால், பிராணமர்களின் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்வீர்களா?

சமயங்கள் அணைத்தும் பல நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டவை. இதில் சிறிது, பெரிது என வாதிடுவது முடிவிலியாகவே அமையும். தன் சமயம்தான் சரியானது என்பதும், அதனை நிறுவ பிற மதங்களை குற்றம் சாட்டுவது என்பதும் மடமை. மற்ற மதங்களை குற்றம் சொல்லும் முன், தன் மதத்தில் பிழை இல்லையா எனப் பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

குரான் இறை வேதமா?

குரான் இஸ்லாமியர்களுக்கு இறை வேதமாக உள்ளது. அவர்கள் குரான் இறைவனால் ஜிப்ரயீல் என்ற வானவர் மூலம் முகம்மதுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்பட்டது என நம்புகின்றனர். குரானில் எழுதப்பட்டுள்ளவை நேரடியான கடவுளின் வார்த்தைகள் என இஸ்லாமியர் நம்புகின்றனர். குரான் மிகவும் தூய்மையானது எனவும், அழிவற்றதெனவும், மாற்றமில்லாதது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் வாழ்க்கை இதனை ஒட்டியே இருக்க வேண்டும். குரான் சொல்லப்பட்டவாறு வாழாதவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் பெயரளவில்தான் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொள்ள முடியும். குரான் இல்லாவிட்டால், இஸ்லாம் இல்லை. குரான் இறை வேதமாக இல்லாவிட்டால், இஸ்லாம் என்ற மதமே பொய்.

குரான் இறை வேதமா?

முகம்மதுவினால் தன்னைப் பின்வற்றியவர்களுக்கு குரானை வாய்மொழியாக சொல்லிக் கொடுத்தார். குரானின் தோற்றம் கி.பி. 609–632 காலப்பகுதி ஆகும். குரானில் உள்ள கருத்துக்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்களின் விவிலியத்திலும் (பைபிள்), யூதர்களின் டனாக் (Tanakh) அல்லது தோரா (Torah) எனும் யூத சமயத்தினரின் புனித நூலிலும் காணப்படுகின்றது. இதனை குரானின் 3:3 வசனம் உறுதி செய்கிறது. குரான் 3:3 உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தவ்ராத் என்பது தோராவையும் (Torah) இன்ஜீல் என்பது கிறிஸ்தவ விவிலியதின் புதிய ஏற்பாட்டை (New Ttestament) அல்லது நற்செய்திகளைக் (Gospel) குறிப்பிடுகிறது. ஆகவே இந்த வசனத்தின்படி கடவுளே (அல்லாஹ்) யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களைக் கொடுத்தார் என்றாகின்றதல்லவா? ஆகவே கடவுள் கொடுத்த அந்தப் புனித நூல்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்க வேண்டும் அல்லவா? கடவுளின் கட்டளையை ஏன் மீறுகிறார்கள். கடவுள் சொன்னாலும், தாங்கள் அந்த சமய நூல்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற அறியாமையில் உள்ளார்களா?

யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களை இறைவேதமாக ஏற்றுக் கொள்ளாததற்கு இரு காரணங்களை முஸ்லிம்கள் முன்வைக்கின்றனர்.
  • காலாவதியாகிவிட்ட நூல்கள் - அந்த இரண்டு நூல்களும் வெவ்வேறு காலங்களில் கொடுக்கப்பட்டவை. எக்காலத்திற்கும் ஏற்புடையது குரான் மட்டுமே. எனவே அதனை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதுமானது.
  • திரிபுபடுத்தப்பட்ட நூல்கள் - யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவ்விரு நூல்களிலும் தங்களுக்கேற்றவாறு மாற்றி எழுதிக் கொண்டார்கள். திரிபுபடுத்தமாமல் எழுதப்பட்டது குரான் மட்டுமே.

யூதர்களின் வேதம் மோசேக்கு (மூஸா) கொடுக்கப்பட்டதாக குறிப்பிடும் காலம் சுமார் கி.மு. 1391–1271 இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது சுமார் கி.மு. 600-400 காலப்பகுதியில் எழுத்து வடிவம் பெற்றது. பின்னர், கிறிஸ்தவர்களின் விவிலியம் சுமார் கி.பி. 33-120 ஆண்டளவில் உருவாகியது. பின்னர் குரான் கி.பி. 609–632 காலப்பகுதியில் உருவாக்கம் பெற்றது. இந்த அடிப்படையில் முதல் இரண்டிற்கும் இடையிலான காலம் சுமார் 1500 ஆண்டுகள். கடைசி இரண்டிற்கும் இடையிலான காலம் சுமார் 500 ஆண்டுகள். குரானின் பின் தற்போதுள்ள காலம் சுமார் 1400 ஆண்டுகள். 21 ஆம் நூற்றாண்டு வளர்ச்சியானது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டைவிட துரிதமானது. ஆகவே, குரான் காலாவதியாகிவிட்டது எனக் கொள்ளலாமா? குரான் காலாவதியாகவில்லை என்பதை எந்த அடிப்படையில் குறிப்பிடலாம்?

யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதங்களை  தங்களுக்கேற்றவாறு மாற்றி எழுதிக் கொண்டார்கள் எனில், மாற்றப்படாத முன்னைய வேதங்கள் எவை? அவை எங்குள்ளன? புதிய மதத்திற்காக முன்னைய வேதங்களின் திரிபுபடுத்தல் குரான் எனவும் கருதலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களை நகல் செய்து, அவற்றைத் திரிபுபடுத்தி குரானை உருவாக்கினர் என்பதற்கும் இடம் உள்ளதல்லவா? இல்லை என்பீர்களானால் அதற்கான ஆதாரம் என்ன? இதனை இறைவன்தான் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? இவ்வாறுதானே ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் நூல்களை இறைவன் கொடுத்தார் எனக் கூறுகிறார்கள். இதற்கு இஸ்லாமியர் எப்படி விதிவிலக்காவர்? இது மற்றவர்களுக்கு விளங்காது, அவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது என்று கதை சொல்வது முறையல்ல. ஒவ்வொரு சமயத்தினரும் தங்களுக்கென கதைகளை உருவாக்கி, மற்றவர்கள் அதை நம்ப வைத்திருக்கிறார்கள். இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல. இறைவன்தான் குரானை வழங்கினார் என்பதை ஆதாரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், குரானும் மற்ற சமய நூல்களில் ஒன்றே. அது இறை வேதம் அல்ல!

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர மன்னர்களில் ஒருவர். இவர் சேர மன்னர்களில் இரும்பொறை என்ற மரபினரைச் சேர்ந்தவர். இரும்பொறையினர் தொண்டி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தனர். இவர்களில் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னன் ஒருவன் சிறப்புற்று விளங்கினான். அவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய அரசருக்குரிய அருங்குணங்கள் பலவற்றையும் கொண்டிருந்தார். வீரமும், ஈரமும் வாய்ந்தவனாகவும் விளங்கினார். கணைக்கால் இரும்பொறை வேந்தனாக விளங்கியதுடன் செந்தமிழ்க் கவிஞராகவும் திகழ்ந்தார். சங்கப் புலவர்களில் ஒருவராகிய பொய்கையார் என்னும் புலவரிடம் கற்று இனிய தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவனாகவும் அவன் விளங்கினார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட பெருவேந்தன் கோச்செங்கணானுக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. கோச்செங்கணான் ஒப்புயர்வற்ற பெருவீரம் கொண்ட சிறந்த சிவ பக்தர். ‘எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்டவன்’ என்று புகழ் பெற்றவன். தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத வேட்கை கொண்டவர். இவ்விருவர்க்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் வளர்ந்து பெருகிச் சிறு பொறியே பெருந்தீயானது போலப் பெரும் போராய் மூண்டது. இரு வேந்தரும் தம் பெரும் படைகளுடன் திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் சந்தித்தனர். போர் தொடங்கியது. முடிவில் சேரர் படை தோல்வியடைந்தது. செங்கணான் இரும்பொறையைச் சிறைப்படுத்தினார்.


செங்கணான் சிறைப்பட்ட சேர வேந்தனைக் குடவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் சிறை வைத்தார். மானமே பெரிதென மதிக்கும் மன்னனாகிய இரும்பொறை தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணி அகம் வருந்தினார். செங்கோல் ஏந்தும் கையில் சங்கிலியைப் பிணைத்து இழுத்து வரப்பெற்ற தன் இழிவை நினைத்து உள்ளம் குமுறினார். போர்க்களத்திலேயே மாண்டு மடிந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிராதன்றோ என்று ஏங்கினார். தனக்கு நேர்ந்த இந்த அவமானம் தன்னோடொழியாது சேரர் பரம்பரைக்கே பேரவமானமாக நிலைத்து விட்டதே என்று கலங்கினார். இத்தகைய மான உணர்ச்சியால் உணவும் உண்ணாமல் உறங்கவும் செய்யாமல் உள்ளமும் உடலும் சோர்ந்து கிடந்தார்.

கவலையாலும் பசியாலும் வாடிக் கிடந்த கணைக்கால் இரும்பொறைக்குக் களைப்பு மேலிட்டது. கண்கள் இருண்டன. நா உலர்ந்தது. தாங்க முடியாத நீர் வேட்கை உண்டாயிற்று. அதனால் அவன் நிலைகுலைந்து அச்சிறைக் காவலனை நோக்கிச் சிறிது நீர் கொணருமாறு பணித்தார். அச்சிறைக் காவலன் செருக்கு மிக்கவன். உணவுண்ணாமல் வாடிக் கிடக்கும் மன்னன் நிலைகண்டு மனம் பதறாமல் வாளா இருந்தான். நெடுநேரமாகியும் அவன் நீர் கொண்டு வந்து தரவில்லை. சிறைக்காவலன் கூட அவரை அலட்சியமாகக் கருதினான். இதனை நினைத்து நெஞ்சு புழுங்கினார் இரும்பொறை. சேர வேந்தன் இவ்வாறு சிந்தை நொந்து துடிக்கும் போது, வெந்த புண்ணில் வேல் நுழைத்தலைப் போல அச்சிறைக் காவலன் நீண்டநேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான்.

இதைக் கண்ட இரும்பொறையின் கண்கள் சிவந்தன. சினத்தால் அவர் உடல் நடுங்கியது. சிறைப்பட்ட அவன் சினம் யாரை என்ன செய்யும்? என்றாலும் தனக்கு ஏற்பட்ட பேரவமானத்தை அவரால் தாங்கமுடியவில்லை. “ஆ! என்னே என் இழிநிலை! போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறத்தலே எம் போன்ற வேந்தர்க்கு அழகு! அங்ஙனம் இன்றி நோய் முதலியவற்றால் இறந்தாலும் அவர்களும் போர்க்களத்தில் இறந்ததற்கு அறிகுறியாக அவர்கள் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்வது மன்னர் குல மரபன்றோ? குழந்தை பிறந்து இறந்தாலும், உருவமற்ற மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றையும் வாளால் பிளந்து அடக்கம் செய்வதில் தவற மாட்டார்களே! அத்தகைய மன்னர் பரம்பரையில் என்னைப் போல இழிந்தவன் ஒருவன் பிறக்கலாமோ? போர்க்களத்தில் பகைவன் வாளால் பிளக்கப்படாமல் சிறைப்பட்டேனே! நாயைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல இழுத்து வந்து இச்சிறையில் தள்ளித் துன்புறுத்தியும் நான் சாகாமல் வாழ்கிறேனே! உண்ணாமல் உயிர் விடத் துணிந்த நான் இவ்வற்பனிடம் இந்நீரை யாசிக்கக்கூடாது என்ற மனவுறுதியில்லாமல் நீரைக் கேட்டு மானம் இழந்தேனே! இங்ஙனம் மானம் இழந்தும் நான் உயிர் வாழலாமோ?” என்று அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார் இரும்பொறை.

அதனால் சேர மன்னன் சிறைக்காவலன் கொண்டு வந்து வைத்த நீரைப் பருகாமல் உயிர்விடத் துணிந்தார். தன் உள்ளக் குமுறலை அழகிய செந்தமிழ்ப் பாடலாக ஓர் ஓலையில் வடித்து வைத்தார். புறநானூறு குறிப்பிடும் அப்பாடல் பின்வருமாறு:

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வலகத் தானே”

நெஞ்சம் உருக்கும் இப்பைந்தமிழ்ப் பாடலைப் பாடிய இரும்பொறை, மானம் இழந்து வாழ்ந்தார் என்பதைவிடத் தன் மானத்தைக் காக்க உயிரையே துறந்தார்.

சிறையில் சேர வேந்தன் இறந்தது அறியாத செந்தமிழ்ப் புலவர் பொய்கையார் அவனைச் சிறை விடுவிக்க முயன்றார். சேரனின் அருமை பெருமைகளைச் சோழனுக்கு உணர்த்தி அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரும்பாடுபட்டார். “களவழி நாற்பது” என்னும் சிறந்த நூல் ஒன்றினை இயற்றிச் செங்கணான் அவையில் அரங்கேற்றினார். அந்நூல் இரும்பொறையுடன் அவர் நடத்திய பெரும்போரில் அப்போர்க்களம் வழங்கிய கோரக் காட்சியைச் சித்திரிப்பதாகும். அதன் உட்பொருளை உணர்ந்த செங்கணான் தன்னால் விளைந்த பேரழிவினை எண்ணித் துன்புற்றார். தனக்கு அறிவுரை அளித்த புலவர் பொய்கையாரைப் பணிந்து, “புலவர் ஏறே! உங்கள் பொருள் மொழியால் நான் உண்மையை உணர்ந்தேன். மனம் தெளிந்தேன். இனிப் போர் புரியேன். எனக்கு தக்க சமயத்தில் இவ்வறிவுரை கூறிய தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று கூறினார்.

பொய்கையார், “வேந்தர் வேந்தே! உன் தெளிந்த உள்ளத்தைக் கண்டு உவக்கிறேன். நான் வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல. உன் அருளை வேண்டுகிறேன். இரும்பொறை என் செந்தமிழ் மாணவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து நீங்கள் இருவரும் ஒன்றிவாழ வேண்டும் என்பதே நான் விரும்பும் பரிசில்” என்றார்.

அவ்வுரை கேட்ட செங்கணான், “ஆ! சேரமன்னன் தங்கள் மாணவரா? தமிழறிந்த அவ்வேந்தரைச் சிறைப்படுத்தியது தமிழையே சிறைப்படுத்தியதாகும். வாருங்கள் இப்போதே அவரைச் சிறைவிடுத்து மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.” என்று கூறிப் புலவருடன் குடவாயிற் கோட்டம் சென்றார். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. இறந்து கிடந்தார் இரும்பொறை. அவர் எழுதி வைத்த பாடல் அவனுடைய மான வீரத்தை விளக்கி நின்றது. போரிலே வென்ற தன்னை இரும்பொறை மானத்திலே வென்று விட்டதறிந்து செங்கணான் கண்ணீர் சொரிந்தார். ஒப்பற்ற தமிழ்ப் புலவனான அவனைக் கொன்ற குற்றம் தன்னோடொழியாது சோழ பரம்பரைக்கே அழியாத களங்கமாய் நிலைத்து விட்டதை எண்ணி நாணினார். தன் பிழையை மன்னிக்குமாறு பொய்கையாரை வேண்டினார்.

பொய்கையார் செங்கணானை நோக்கி, “மானம் இழந்து உயிர்வாழ விரும்பாத இரும்பொறையின் செயல் மன்னர் பரம்பரைக்கே பெருமையளிப்பதாகும். இவன் மரணத்தால் தமிழ் வேந்தர்களாகிய நீங்கள் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். இனியேனும் நீங்கள் உங்களுக்குள் பகைமை கொண்டு போர் புரியாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து தமிழ் நாட்டைப் பெருமைப் படுத்துவீர்களாக,” என்று அறிவுரை கூறித் தேற்றினார்.

பாப்பரசர் தவற மாட்டாரா?

பாப்பரசரின் தவறா வரம் அல்லது திருத்தந்தையின் தவறா வரம் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிறிஸ்தவர்களின் கத்தோலிக்கப் பிரிவினர் தங்கள் தலைவரான பாப்பரசர் (திருத்தந்தை) தவறு செய்யாத வரத்தைக் கொண்டுள்ளனர் என்ற சமயக் கொள்கையைக் கொண்டுள்ளனர். ஆகவே அவர் எடுக்கும் முடிவுகள் தவறு அற்றவை என்றும், அவற்றை கத்தோலிக்கர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டினைக் கொண்டுள்ளனர். பாப்பாண்டவரின் தவறா வரத்தினை ஆங்கிலத்தில் Papal infallibility என அழைக்கலாம்.

பாப்பரசரின் தவறா வரம்

இயேசு எப்போது திருச்சபையின் தலைவராக பேருதுவை நியமித்தாரோ, அன்றிலிருந்து இன்று வரை உள்ள திருச்சபைத் தலைவர்கள் தவறா வரம் கொண்டுள்ளனர் என கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் அவர் பெற்ற வரம் அப்படி என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். உண்மையில் பாப்பரசர் தவறா வரம் என்ற ஒன்றைக் கொண்டுள்ளாரா? அன்றிலிருந்து இன்று வரை உள்ள பாப்பரசர்கள் எடுத்த முடிவுகள் தவறவில்லையா?


பாப்பரசரின் இவ்வரம் பற்றி காலத்துக்குக் காலம் விளங்கங்கள் பல அளிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம். அவ்வரம் பற்றிய மேலதிக விளக்கங்களாகவும், நியாயப்படுத்தல்களாகவும் அமைந்துள்ளன. ஆனால், 15 ஆம் நூற்றாண்டளவில் அது பற்றிய மறுப்புக் கருத்துக்கள் கத்தோலிக்கருக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாகத் தொடங்கின. 1989–1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 15 முதல் 25 வயதுள்ளவர்களிடம் (81% கத்தோலிக்கர்கள்) ஐக்கிய அமெரிக்கா உட்பட கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள கிட்டத்தட்ட 11 நாடுகளில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 36.9% பேர் பாப்பரசர் தவறா வரம் உள்ளவர் என்றும், 36.9% பேர் அதை மறுதலித்தும், 26.2% பேர் அதுபற்றி தங்களுக்குத் தெரியாதென்றும் தெரிவித்தனர்.

இது ஒரு புறமிருக்க, வரலாற்று நிகழ்வில் பாப்பரசர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள் எவ்வாறு அமைந்தன என நோக்குவது ஏற்புடையது. சிலுவைப் போர்கள் எல்லாம் பாப்பரசர்களின் அனுமதியுடனும் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றன. போர்கள் எப்போதும் கண்மூடித்தனமாகவே இருக்கும். அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவதும், அநியாயங்கள் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாது. சிலுவைப் போர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்ற போதனையில் பிறந்த சமயத்தின் தலைவர்கள் போருக்கு அனுமதியளித்தது தவறில்லையா? இவ்வாறு பல வரலாற்று உதாரணங்கள் பாப்பரசர்கள் தவறு செய்ததை நமக்குக் காட்டுகின்றன. உண்மையில் தவறா வரம் என்பது மக்களின் சிந்தனையில் தாங்கள் சரியானவர்கள் என்னும் கருத்தைத் திணிக்க உருவாக்கப்பட்ட ஒரு இறையியல் போதனை.

குறிப்பு: எதிர்க்கருத்து இருப்பின் நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.

மனநிலை மாற்றம்

நம்முடைய சொந்த உளக்காட்சியினைக் கொண்டே நாம் மிக அதிகமாக விடயங்களைப் பார்க்கின்றோம். நம்முடைய எண்ணங்கள் குறிப்பிட்ட விடயங்களில் பொறிக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான நிலையில் இருந்தால், நம் மனநிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். மனநிலை என்பது ஒருவருடைய நடத்தையையும் மனோபாவத்தையும் முடிவுசெய்யும் நம்பிக்கைகள் அல்லது சிந்திக்கும் வழி ஆகும். நாம் எப்படி விடயங்களைப் பார்க்கின்றோமோ அப்படியே நம் குணவியல்பும் அமையும். அவ்வாறே நம் சிந்தனையும் நம்பிக்கையும் நம் நடத்தையைத் தீர்மானிக்கும்.

மனநிலை மாற்றம்

முன்னேற்ற உருவாக்கத்தில் ஒரு பெரும் காரணியாக மனநிலையை அகற்றுதல் காணப்படுகிறது. உங்கள் நடத்தையிலும் மனோநிலையிலும் ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை எடுத்தலும், அதற்கு மாறான மனநிலையை அகற்றலும் முக்கியமானது. நம் எல்லோரிடமும் சில பிழையான குணவியல்புகள் உள்ளன. அவற்றை நாம் கண்டுபிடித்து, நேரான மனநிலைக்கு மாற்றப் போராட வேண்டும்.

மனநிலை பற்றிய ஒரு ஆப்பிரிக்க கதை உள்ளது. பாதணி விற்கும் நிறுவனம் ஒன்று தன் இரு விற்பனை முகவர்களை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியது. முதலாவது நபர் "இங்கு யாரும் பாதணி அணிவதில்லை" என தன் கடிதத்தில் குறிப்பிட்டு, தன் வேலையை ராஜினாமா செய்தார். இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என தன்னுடைய மகிழ்ச்சியையும், வியாபாரத்திற்கு இடமுள்ளதையும் குறிப்பிட்டு தன் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார். இங்குள்ள வேறுபாடு என்னவெனில் இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என்ற நேர் மனநிலையைக் கொண்டிருந்தார். இதுதான் வேறுபாடு! நேர் மனநிலை நம்பிக்கையைக் கொண்டுவரும். ஒருவர் சாத்தியமற்ற சூழ்நிலையைக் காண, மற்றவர் முடிவற்ற சாத்தியப்பாட்டைக் கண்டார்.

தெளிவாக குறிப்பிடக்கூடியது என்னவென்றால், நம்முடைய மனநிலை நம்முடைய மனோபாவத்திலும், மிகவும் முக்கியமாக நம்முடைய நடத்தையையிலும் தாக்கம் செலுத்தும். நம் சிறப்பிற்காக நடத்தையிலும் முன்னேற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தடைசெய்யும் பிழையான மனநிலையை விலக்குவதும், ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை பற்றிக் கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்க்கையின் கையிருப்பு

வாழ்க்கையின் கையிருப்பு

வாழ்க்கையின் கையிருப்பு

நமது பிறப்பு ஆரம்பக் கையிருப்பு.
நமது இறப்பு முடிவுக் கையிருப்பு.
சார்புப் பார்வை நம் சட்டக்கட்டுப்பாடு.
திறனுள்ள சிந்தனைகள் எம் சொத்துக்கள்.
இதயம் நமது நடப்புச் சொத்து.
ஆன்மா அசையாச் சொத்து.
மூளை எமது நிலையாக வைப்பு.
சிந்தனை நடப்புக் கணக்கு.
சாதனைகள் நமது முதலீடு.
குணவியல்பும் நெறிமுறையும் நம்முடைய கையிருப்புப் பொருள்.
நண்பர்கள் நமது பொது சேமிப்பு.
பண்பும் நடத்தையும் நமது நல்லெண்ணம்.
பொறுமை எமது சம்பாதித்த வட்டி.
அன்பு நமது பங்கீடு.
பிள்ளைகள் மிகையூதிய பலன்.
கல்வி எம் வணிக குறியீடு.
அறிவு நம்முடைய மூலதனம்.
அனுபவம் எம்முடைய உயர் மதிப்புத் தொகை.
இலக்கு என்பது கையிருப்பு குறிப்பை சரியாக கணக்கிடுதல்.
குறிக்கோள் என்பது சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கு விருதைப் பெறுவது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் தழும்பவில்லை.


அத்தோடு ஜப்பானியர்களின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் நின்றுவிடவில்லை. விளையாட்டரங்கில் போட்டியைக் காண வந்த ஜப்பானிய இரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் அங்கு கைவிடப்பட்டிருந்த குப்பைகளைச் சேகரித்து விளையாட்டரங்கை சுத்தப்படுத்தியதைக் காண முடிந்தது. ஏன் நமக்கு இந்த வீண் வேலை என்று செல்லும் இன்றைய உலகில், தோல்வியின் பின்னரும் ஒழுக்கம், கடமையுணர்ச்சி ஆகியவற்றைக் கைவிடாத ஜப்பானியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும், குழு நிலை ஆட்டத்தில் ஜப்பானுக்கும் செனகல் நாட்டிற்கும் ஒரே அளவான புள்ளிகள்தான் இருந்தன. ஆனால் ஜப்பான் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகக் காரணம் அவர்கள் அதிகம் முறை தவறிய ஆட்டம் (foul) ஆடியிருக்கவில்லை. செனகல் அதிகமாக முறை தவறிய ஆடியதால் அடுத்த சுற்றிற்குச் செல்ல முடியாமல் தோற்றுவிட்டது.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பலவிடயங்கள் உள்ளன. அதில் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்கூட உள்ளடங்குகின்றன.

யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதைக் கேட்டால் பலருக்கும் பலவித மனநிலைகள் உருவாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது பலருக்கு வெறுப்பு, கோபம், பயங்கரவாதி, தீவிரவாதி போன்ற எண்ணங்களையும், பலருக்கு போராட்டம், விடுதலை, தியாகம், வீரம் போன்ற எண்ணங்களையும், வேறு சிலருக்கு திகில், கிலி போன்ற எண்ணங்களையும் உருவாக்கும்.

யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?
யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற வாதிப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அந்த இயக்கம் தமிழர் வாழ்வியலில், உலக வரலாற்றில், இராணுவ ரீதியில் ஏற்படுத்திய தாக்கங்கள் சிலவற்றைப் பார்ப்பது எவ்விதத்திலும் பிழையாகாது. விடுதலைப் புலிகள் பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். விடுதலைப் புலிகள் பற்றி நல் அபிப்பிராயம் இருந்தாலும் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளலுக்கு எதிரி, நண்பன் என்ற பாகுபாடு தேவையில்லை.

உலகில் உள்ள விடுதலை அமைப்புக்கள் தனக்கென, தனித்துவமான தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை. விடுதலைப் புலிகள் புலியின் வரியைப் போன்ற சீருடைகளைக் கொண்டிருந்தனர். இராணுவப் பிரிவு பச்சை நிறம் அதிகம் சார்ந்த கிடையான கோடுகளையும், சிறுத்தைப் பிரிவு செங்குத்தான கோடுகளையும் அணிந்தனர். கடற்புலிகள், வான்புலிகள், கரும்புலிகள் என்பன முறையே நீலம், மென் நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் கிடையான கோடுகளையுடைய சீருடைகளை அணிந்தனர். காவல் துறை மென் நீல நிறத்தில் அணிந்தனர்.

உலகில் உள்ள எந்தவொரு விடுதலை அமைப்பும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் கட்டியதில்லை. வீடுதலைப் புலிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைத்தனர். அவை நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தன.

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை. இதில் உயிர்க்கொடை செய்த கரும்புலிகள் எண்ணிக்கையை எந்தவொரு விடுதலை இயக்கத்தின் தற்கொலைப் போராளிகள் கொண்டிருக்கவில்லை.

உலகில் புலிகள் போல் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான கட்டமைக்கப்பட்ட சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை. முகநூல்களிலும் உட்பட்ட சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை.

விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை. அதேபோல் எந்த நாடும் அவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமகமாக பாரிய உதவி செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் போல் எந்த விடுதலை இயக்கமும் முப்படைகளையும் கொண்ட மரபுவழி படையாக வளரவில்லை.  தரைப்படை, வான்படை, கடற்படை, புலனாய்வுத்துறை என்ற படைத்துறைக்கட்டமைப்புக்களுடன், நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் போன்ற ஒரு அரசாங்கத்திற்குத் தேவையான கட்டமைப்பை வேறு எந்த விடுதலை அமைப்பும் கொண்டிருக்கவில்லை.

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தாயகத்திற்காக தேசியக் கொடி, தேசிய கீதம், தேசியச் சின்னம், தேசிய நிறம், தேசிய மலர், தேசிய விலங்கு, தேசிய மரம், தேசியப் பறவை என்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

இருநாட்டின் அதிபர்களைக் கொல்லவும், தாக்குதல் நடத்தவும், முக்கிய அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி, கொல்லும் இராணுவ மேலாண்மை வேறு விடுதலை இயக்கத்திற்குக் கிடையாது.

தொடர்ச்சியாக முக்கிய, பலமிக்க இராணுவ முகாம்களை தாக்கியழித்தல், தொடர்ச்சியாக கேந்திர முக்கியத்துவமுள்ள இடங்களை தாக்குதல் போன்ற இராணுவ பலம் கொண்ட அமைப்பாக வேறு இயக்கங்கள் இருந்ததில்லை.

தன் உறுப்பினர் பிடிபடாது தன்னையே மாய்த்துக் கொள்ள, கழுத்தில் நச்சு வில்லைகள் அணிந்து நடமாடிய சிறப்பு வேறு இயக்கத்திற்கு இல்லை.

எதிராளி இனம் உட்பட்ட, எந்தப்பெண்ணையும் பாலியல் வல்லுறவு செய்யவில்லை.

புலிகள்போல் எந்த விடுதலை இயக்கமும் கொல்லப்பட்ட எதிரிப்படையினரை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யவில்லை.

மது, மாது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை தன் உறுப்பினருக்கு தடைசெய்ததுடன், மீறுவோருக்கு தண்டனை வழங்கும் பழக்கத்தினை எந்த விடுதலை அமைப்பும் செய்ததில்லை.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக வெளியார் உதவியின்றி தன் இராணுவ, பொருளாதார பலத்தில் குறிப்பிட்ட நிலப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, ஒரு அரசாங்கம் போல் ஆட்சி செய்ததைப்போல் வேறு இயக்கங்கள் செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் ஆட்சிப் பிரதேசத்தில் காணப்பட்ட சட்ட ஒழுங்கு, குறைவான சமூக குற்றம், இலஞ்ச ஒழிப்பு, குறைவான போதைப் பொருள் பாவனை, குழு வன்முறை இன்மை போன்ற நல்ல அம்சங்கள், இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இல்லை.

சங்ககால இலக்கியம் குறிப்பிட்ட வீரம், மூவேந்தர் கால வீரம் என்பன நீண்ட இடைவேளையின் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலேயே நிகழ்ந்தது. எனவே தமிழர் வீரம் நிகழ்ந்த காலம் என்பன முறையே சங்ககாலம், மூவேந்தர் காலம், புலிகளின் காலம் ஆகும்.

புலிகள் என்றால் தமிழர், தமிழர் என்றால் புலிகள் என மற்ற இனத்தவர் கருத வரலாற்றின் தன் வீரத்தால் எழுதியவர்கள் புலிகள் ஆவர்.

Note: The article is briefly translated into English for non-Tamil readers.

Liberation Tigers of Tamil Eelam aka LTTE could be interpreted into terrorists or liberators as per own view. Here, I would like to highlight some key feature of LTTE that impact on history, military and Tamils life. You should not be a LTTE sympathizer to learn. Even though, you can learn from all including from your enemy.
  • There was no liberation organization that had unique uniform like LTTE. 
  • There was no liberation organization like tigers that built beautiful and symmetrical graveyards for its members.
  • LTTE lost more than 30,000 fighters including more members of suicide squads than any organizations.
  • Tigers had well organized websites and social media structures.
  • Liberation Tigers had all type of military structure such as army, navy and air force, and elite units. Also, it had a government structure including justice, economy, finance, admiration, political, etc. 
  • Unlike other organizations, LTTE declared national flag, national emblem, national color, national flower, national animal, national tree and national bird for proposed motherland. 
  • LTTE is the only organization that killed two heads of two countries and attacked on country head.
  • Tigers had military might that destroyed military structures and attacked on key / import infrastructures.
  • Unlike other rebels, LTTE members always wear cyanide capsule. 
  • There was no accusation of wartime rape crime including on enemy’s woman.
  • Only rebel organization that gave military funeral respect to killed enemy soldiers.
  • LTTE members were prohibited on prostitution/illegal intercourse, alcohol, drugs and smoking habits.
  • Tigers ran a shadow government in their controlled area for nearly two decades. 
  • Unlike under government of Sri Lanka, LTTE controlled area had less crimes including bribery, rape, violent, robbery, etc.
  • LTTE was the organization that restored Sangam era and Chola, Sera & Pandiya warrior life. 
  • LTTE rewrote history that Tigers meant for Tamils and Tamils meant for Tigers.

நேர முகாமைத்துவம்

நேர முகாமைத்துவத்திற்கான 30 இலகு அறிவுரைகள். நேர முகாமைத்துவம் என்பது ஒரு பரந்த விடயப்பரப்பாகும். ஆயினும், இலகுவில் செயற்படுத்துவதற்கேற்ப முப்பது அறிவுரைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
நேர முகாமைத்துவம்
நேர முகாமைத்துவம்


  1. உங்கள் எல்லா நேரத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு முயற்சியிலும் சரியாக செய்து திருப்தி பெறுங்கள்.
  2. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் மகிழ்ச்சியாயிருங்கள்.
  3. நல்லதே நடக்கும் என நம்புபவராக முயன்று, உங்கள் வாழ்வில் நல்லதைத் தேடுங்கள்.
  4. வெற்றிக்கான வழிகளைக் கண்டு கொள்ளுங்கள்.
  5. தோல்விகளைப் பற்றி எண்ணி வருந்தாமல், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
  6. முக்கியமான விடயங்களுக்கு போதுமான நேரம் உள்ளதென்பதை நினைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாயின், அதைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
  7. உங்கள் நேரத்தில் இலவசமான நேரம் கிடைக்குமாவென்று பாருங்கள்.
  8. உங்கள் பழைய பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, அதை மாற்ற அல்லது இல்லாதொழிக்கப் பாருங்கள்.
  9. காத்திருக்கும் நேர மீளாய்வை பயன்படுத்துங்கள் அல்லது பிரச்சனைகளை அப்பியாசம் செய்ய முயலுங்கள்.
  10. ஒரு காகிகதத்தில் அல்லது பொருத்தமான ஒன்றில் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.
  11. மாதாந்தம் வாழ்நாள் இலக்குகளை பரிசோதித்து மீளாய்வு செய்து, நாளாந்தம் அந்த இலக்குகள் நோக்கிய முன்னேற்றத்தை உள்ளடக்குங்கள்.
  12. உங்கள் இலக்குகள் மீதான நினைவூட்டல்களை வீட்டிலும் அலுவலகத்திலும் அமையுங்கள்.
  13. நீண்ட கால இலக்குகளை எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள்.
  14. ஒவ்வொரு நாள் காலையிலும் அல்லது அடுத்த நாளுக்கு முந்திய இரவு திட்டமிட்டு, முதன்மைப்படுத்துங்கள்.
  15. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பட்டியலை தயாரித்து, முக்கியமானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு முடித்துவிடுங்கள். நாள் முடிவில் அதை மீளாய்வு செய்யுங்கள். 
  16. திட்டமிடப்பட்ட விடயங்கள், குறிப்பாக முக்கியமான விடயங்கள் முடிந்ததும், உங்களுக்கு நீங்களே பரிசளியுங்கள். 
  17. முதன்மையானதை முதலில் செய்யுங்கள்.
  18. உங்கள் மீதும், நீங்கள் முதன்மைப்படுத்திய நியாயப்படுத்தலின் மீதும் உறுதியாய் இருந்து என்னவாயிருந்தாலும் அவற்றில் உறுதியாயிருங்கள்.
  19. நீங்கள் காலம் தாழ்த்தினால், உங்களை நீங்களே “ஏன் நான் தவிர்த்தேன்?” என கேள்வி கேளுங்கள்.
  20. திட்டத்தின் மிகவும் கடினமான பகுதியிலிருந்து ஆரம்பியுங்கள். அதனால், மேசமான விளைவு ஏற்படும் அல்லது ஏனைய சிறிய விடயங்கள் முடிக்கத்தேவையில்லை என கண்டுகொள்வீர்கள்.
  21. அனுகூலமற்ற திட்டங்களில் ஈடுபடும்போது உங்களை நீங்களே பிடித்துவிடுங்கள். அத்துடன் எவ்வளவுக்கு விரைவாக முடியுமோ அந்தளவிற்கு நிறுத்திவிடுங்கள்.
  22. அதி முன்னுரிமை விடயங்கள் அல்லது செயற்பாடுகளில் கவனம் செலுத்த நேரம் ஒதுக்குங்கள். 
  23. ஒரு நேரத்தில் ஒரு விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  24. நீண்ட இலாபம் கொடுக்கும் இடங்களில் கடுமுயற்சி செய்யுங்கள்.
  25. நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள் என தெரிந்தபோது, உங்களை நீங்களே முன்னே தள்ளி, உறுதியாக இருங்கள்.
  26. சாத்தியமானபோது சிந்தனையை எழுத்தில் வைத்து; மீளாய்வு, மீள்மதிப்பீடு செய்யவும் இலகுவாக்குங்கள்.
  27. தேவைப்படும்போது நீங்களே குறிப்பிட்ட கால எல்லையை உருவாக்கவும், அதற்கு உண்மையாகவும் இருங்கள்.
  28. தேவைப்படும்போது பொருப்புக்களை மற்றவரிடம் ஒப்படையுங்கள்.
  29. தேவையான ஓய்வினை எடுத்து, பின் செயற்படுங்கள்.
  30. தேவைப்படும்போது அறிவுரை கேளுங்கள்.

ஆளுமை

ஆளுமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆளாளுக்கு அது வேறுபடும். ஆயினும், இனிமையான ஆளுமை நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு அவசியம்.

ஆளுமை

நாம் ஆயிரக்கணக்கானோரை நம் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் தேவையை சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் ஒன்றை கட்டாயம் நினைவுபடுத்த வேண்டும். அது என்னவென்றால்; "எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றைச் செய்ய ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".

எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.

இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.

பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, முள்ளுக்கரண்டி, உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.

நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.

இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

ஆளுமையின் அடிப்படை

ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
  • வெகுஜன கவர்ச்சி: மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.
  • மனோலயம்: தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.
  • திடக்குறிக்கோள்: தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.
  • நல்ல உடை: இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.
  • உடல் அசைவு, இருக்கை பாவனை: நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.
  • குரல்: தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.
  • கொள்கையில் தீவிர பற்று: இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
  • மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல்: தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.
  • நிதானம்: தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.
  • நகைச்சுவை உணர்வு: முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.
  • சுயநலமின்மை: சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.
  • முகபாவம்: அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.
  • ஆக்கப்பூர்வமான சிந்தனை: நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.
  • உற்சாகம்: இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?
  • நல்ல உடல்நலம்: சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.
  • கற்பனை வளம்: இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.
  • தந்திரம்: நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.
  • பல்துறை ஞானம்: நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.
  • கேட்கும் செவியைக் கொண்டிருப்பது: அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.
  • பேச்சுக்கலை: தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.
  • தனிப்பட்ட கவர்ச்சி: கட்டுப்படுத்தப்பட்ட "பாலியல்" சக்தி/கவர்ச்சி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.